சனி, 3 செப்டம்பர், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-11

இந்து மத ஞானிகள்:

ந்து மதத்தில் பல் வேறு ஆன்மீக சக்திகளைக் கொண்ட பல ஞானிகள் பல்வேறு கால காட்டங்களில் அவதரித்துள்ளார்கள்.மக்களை ஆன்மீகப் பாதையில் அழைத்து செல்லவும் மதத்தை காக்கவும் இவர்கள் மேற்கொண்ட முயற்ச்சிகள் அற்புதமானவை. சைவ நாயன்மார்களானாலும், வைஷ்ணவ ஆழ்வார்களானாலும் தமிழகத்தில் இந்து மதம் மறு மலர்ச்சியடைய காரணமாக இருந்தார்கள்.சமய குரவர்கள் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் சைவம் தழைக்க அரும்பாடு பட்டவர்கள்.பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட பன்னிரண்டு ஆழ்வார்களும் வைணவம் தழைக்க செய்தவர்கள். சாக்த மார்க்கத்தை அபிராமி பட்டர் போன்றவர்களும், கௌமார வழிபாட்டினை அருணகிரிநாதர் போன்ற ஞானிகளும் செழித்து வளர செய்தனர்.

வட இந்தியாவிலும் ராமக்ருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற ஞானிகள் இந்து சமயத்தை செழிக்க செய்தனர். இந்து மதத்தை ஒருங்கிணைத்து தழைக்க செய்த சில ஞானிகளைப் பற்றி இங்கு காண்போம்.

ஆதிசங்கரர்:

கி.பி 9 ஆம் நூற்றாண்டில் கான்சிபுரம் அருகே கலவை என்னும் கிராமத்தில் அவதரித்தர் இந்த மகான். இந்திய முழுவதும் யாத்திரை செய்து பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறல்ல ஒன்றுதான் என்னும் அத்வைத தத்துவத்தை மலர செய்ததுடன், இந்து மதத்தில் பிரிந்து கிடந்த கோட்பாடுகளை ஒன்றிணைத்து இந்து மதத்தை வலிமையாக்கினார். ஆத்ம பேதா,விவேக சூடாமணி,சௌந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஆன்ம நூல்களை படைத்தார். ப்ரம்ம சூத்திரங்கள், பகவத் கீதை மற்றும் சில உபனிஷத்துக்களுக்கு அவர் அளித்த உரைகள் பெரிதும் போற்றப்படுகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதவைதத்தை பரப்பிட சங்கர மடங்களை ஸ்தாபித்தார்.

ஷிரடி சாய்பாபா

100 ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மா நிலத்தில் அவதரித்தார். எளிமையாக வாழ்ந்து பல அற்புதங்களை அருளியவர். இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. 19-20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஞானிகளில் இவரும் ஒருவர்.

ரமண மகரிஷி

தமிழ் நாட்டில் திருச் சுழி என்னும் கிராமத்தில் 1879 ஆம் ஆண்டு பிறந்த இவர்,இளம் வயதிலேயே ஞானத்தைத் தேடி திருவண்ணாமலை அடைந்தார். 17 வயதிலேயே அளப்பறிய ஞானம் அடைந்த இவர், ரமண மகரிஷி என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். பிரபல ஆங்கில நாவலாசிரியர் சோமர்செட்மாம்,அறிஞர் பால் ப்ரண்டன் மகாத்மா காந்தி போன்றவர்கள் எல்லாம் இவரது பக்தர்களாக திகழ்ந்தார்கள்.மனமடக்க இவர் உபேதேசித்த நான் யார் என்னும் விசாரணை உபதேசம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்

வஷிஷ்டாத்வைதத்தை அறிமுகம் செய்த ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார் , 16 வயதில் ஞானத்தை தேடத் தொடங்கி ,30 வயதில் சன்னியாசம் ஏற்றார்.ப்ரம்ம சூத்திரத்திற்கு இவர் எழுதிய ஸ்ரீபாஷ்யம் என்னும் உரை போற்றுதற்குரியது.இந்து மதத்தின் ஆன்ம சுடரொளியாக திகழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியார்.

மத்துவாச்சாரியார்.

த்வைத கோட்பாட்டை உருவாக்கிய இவர், 17 வயதில் சன்னியாசம் ஏற்றார். ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு இரண்டுமே உண்மையானவை என்னும் த்வைத தத்துவத்தை அருளியவர்.மிக உயர்ந்த ஞானிகளில் இவரும் ஒருவர்.

ராமக்ருஷ்ண பரமஹ்ம்சர்

1836 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அவதரித்தார். இளம் வயதிலேயே ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு,, யோகப் பயிற்ச்சி செய்து சமாதி நிலை அடைந்தார். இவருக்கு எண்ணற்ற சீடர்கள் உண்டு . அவற்றில் தலையாயவர் சுவாமி விவேகாநந்தர் ஆவார். ராமக்ருஷ்ணரின் மனைவி சாரதா அம்மையாரும் கணவருக்கு துணையாக ஆன்மீகப்பணியில் ஈடுபட்டு இந்து மத மேன்மைக்குவர்பெரிதும் உதவினார்.

சுவாமி விவேகானந்தர்

நரேந்திரன் என்ற பெயர் கொண்ட இவர், இயற்கையிலேயே மிகுந்த தைரியமிக்கவராய் திகழ்ந்தார். இந்திய ஞானிகளின் அடையாளமாய் இன்றுவரை திகழ்கிறார். ராமக்ருஷ்ணரின் தலையாய சீடராய் இருந்து அவரது மறைவிற்குப் பின் அந்த மடத்தின் தலைவரானார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்க சிக்காகோ நகரில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் கலந்து இந்து மதப் பிரதினிதியாய் கலந்து கொண்டு இவர் ஆற்றிய உரை , உலகம் முழுமையும் இந்து மதத்தை நோக்கி திரும்ப பார்க்க செய்தது. இவர் இந்தியா முழுவதும் தனது குரு ராமக்ருஷ்ணரின் பெயரில் மடங்களை நிறுவி கல்வி, மதம் மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டார்.இளைஞர்களை மதத்தில் ஆர்வமுற செய்தப் பெருமை இவரையே சாரும்.

ராமலிங்க அடிகளார்

தமிழ் நாட்டில் மருதுர் என்னும் கிராமத்தில் பிறந்த இந்த ஞானி, 9 வயதிலேயே முருகன் மீது தெய்வமணி மாலை என்னும் அற்புதப் பதிகத்தை புனைத்தவர்.தொடக்க காலத்தில் சைவ மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், பின்னர் மதத்தின் பெயரால் செய்யப்படும் மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். ஜீவகாருண்யமே சிறந்த ஒழுக்கம் என்னும் புதிய மார்க்கத்தை அறிமுகப்படுத்தினார். உருவ வழிபாட்டினை தவிர்த்து ஜோதி வழி பாட்டினை வலியுறுத்தினார். தனது கொள்கைகளை பரப்புவதற்கு ஏதுவாக வடலுரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அன்னதானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் நிறுவப்பட்டுள்ள சத்திய ஞான சபைகளில் அன்னதானம் வழங்கி ,அந்தப் பணிகள் இன்றுவரை மேற் கொள்ளப்பட்டு வருவது பெருமைக்குரியது.

எண்ணற்ற இந்து மத ஞானிகளீல் ஒரு சிலரை பற்றி மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுமைக்கும் விரவி கிடக்கும் ஞானிகளின் வரலாற்றையும் வாக்கினையும் தேடி கற்பது , நிச்ச்யமாய் நம்மை ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும் .

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-10


மரணத்திற்குப் பின்

ரணத்திற்கு பிறகு , குழந்தைகள் மற்றும் சன்னியாசிகளைத் தவிர மற்றவர்களை எரியூட்டுவதே இந்து மதத்தவர் பழ்க்கமாகும். ப ஞ்ச பூதங்களாலான உடலை அவற்றிற்க்கே அளித்துவிட்டு, ஆன்மாவை அதன் உலகுக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும்.குடும்பத்தவர் யாரேனும் இறந்துவிட்டால் , அந்த குடும்பத்தை சார்ந்த அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அவர்கள் இல்லங்களில் அந்த காலத்தில் எவ்விதப் பண்டிகையும் கொண்டாடப்படக்கூடாது. இறந்தவரின் வாரிசுகள் வேதங்களில் சொல்லிய வண்ணம் இறந்தவற்கான கர்ம காரியங்களை தவறாது செய்து வரவேண்டும்.

இந்து மதம் இறப்பை ஒரு பெரிய நிகழ்வாக கருதுவதில்லை.உடல் மட்டுமே அழியக்கூடியது, ஆன்மா அழிவற்றது என்பதை திடமாக நம்பும் இந்து மதம், முக்தி அடையாத ஆன்மாவிற்கு மறு பிறவி நிச்சயம் உண்டு என்று சொல்கிறது.எனவே முக்தி பெறாத ஆன்மாக்களுக்கு இறப்பிற்கு முன்னரும், பின்னருமான வாழ்க்கை தற்காலிகமானதே என்று கருதுகிறது.இறக்கும் வரையில் இந்த உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு இந்த உலக வாழ்க்கை எப்படி தற்காலிகமானதோ அதை போலவே இறந்த பின்னர் மறு பிறவியினை எதிர் நோக்கி இருக்கும் ஆன்மாவிற்கு அவ்வாழ்க்கையும் தற்காலிகமானதே.

பகவத் கீதை இறப்பிற்கு பின்னர் ஆன்மாவிற்கு இரு வழிகள் உண்டு. ஒன்று சூரிய வழி, மற்றொன்று சந்திர வழி. சூரிய வழியில் செல்லும் ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை . சந்திர வழி செல்லும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றன. சூரிய வழியினை மேல் வழி எனவும் சந்திர வழியினை கீழ் வழியெனவும் குறிப்பிடப்படுகிறது.ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அவன் மேல் வழிக்கோ கீழ் வழிக்கோ அனுப்பப்படுகிறான். ஒருவன் இறக்கும்போது எதனை நினைத்து கொண்டு இறக்கிறானோ அதனையே அவன் அடைகிறான் என இந்து மதம் எடுத்து காட்டுகிறது. தனது குடும்பத்தியே சதா சர்வ காலமமும் நினைத்து கொண்டிருந்து இறப்பவன் தனது மறு பிறவியில் அதே குடும்பத்தை அடைகிறான். இறைவனை த்யானித்து உயிர் விடுபவன் அவன் தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டு முக்தி அடைகிறான். புனித நாட்களில் உயிர் விடுபவன் சொர்க்கத்தை அடைகிறான்.

" இறைவனை நினைத்து ஓம் என்னும் மந்திரத்தை த்யானித்து, ஐம்புலங்களையும் கட்டுபடுத்தி, சுவாசத்தை உள் நிறுத்தி, யோகம் பயில்பவர்கள் சூரிய வழியை அடைகிறார்கள்" பகவத் கீதை(8.12-13)

இவ்வாறு உடலைவிட்டு நீங்கும் ஆன்மா அதனுடைய அடுத்த கட்டத்தை தாமதமின்றிஅடைய இறந்தவரின் வாரிசுகள் அவருக்குண்டான கர்ம காரியங்களை சரியாக செய்யவேண்டும். இவை யாவும் இந்துக்களால் ஏற்று கொள்ளப்பட்ட நம்பிகைகள் எனினும், ரிக் வேதத்தில் மறு பிறவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முக்தி அடையும் ஆன்மா இறைவனை அடைகிறது. அதற்கு மறு பிறவி இல்லை. ஆன்மா இறைவனை அடையும் இடத்தை சைவம் கைலாசம் எனவும், வைஷ்ணவம் வைகுந்தம் எனவும், ப்ரம்மவை வண்ங்குபவர்கள் ப்ரம்ம லோகமெனவும் குறிப்பிடுவார்கள். யமலோகம் என குறிப்பிடப்படுவதே நரகமாகும். இந்துக்களை பொறுத்தவரை சொர்க்கமும் , நரகமும், முக்தி பெறாத ஆன்மாக்களின் தற்காலிக உலகங்கள் ஆகும். உடலில் இருந்து பிரிந்த ஆன்மா அதனடுய வினைகளுக்கேற்ப சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பபடுகிறது. ஆனால் உடலற்ற ஆன்மா சொர்க்கத்தின் மேன்மைகளையோ நரகத்தின் கொடுமைகளையோ அனுபவிப்பதில்லை. அவற்றை உணர மட்டுமே செய்கின்றன.

இந்த உணர்வுகளுடன் மறு பிறவியெடுக்கும் ஆன்மாக்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களின் காரணமாக நல் வழியில் நடந்து முக்தி பெற முயற்சிகின்றன. மாயையால் மறைக்கப்படும் ஆன்மாக்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் மறந்து போய் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அல்லலுறுகின்றன. உடலிலிருந்து நீங்கும் உயரிய ஆன்மாக்கள் தங்கள் உலகை அடையும் வரை ஆவிகளாகவும்,பாவாத்மாக்கள் பேய்களாகவும் திரிகின்றனர்.இவையெல்லாம் வேத காலத்திற்கு பிறகு ஏற்பட்ட நம்பிக்கைகளே எனவும் சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-9


சடங்குகள், பண்டிகைகள் மற்றும் சின்னங்கள்

இந்து மதத்தில் பிறப்பதற்கு முன்பிருந்து இறக்கும் வரை பல்வகையான சடங்குகள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ்வகையான சடங்குகளை சமஸ்கிருதத்தில் "சம்ஸ்கரா" என்று அழைப்பார்கள். இந்த சடங்குகள் மூலம் ஆன்மா உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவதால், இவ்வகையான சடங்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.பொதுவாக எண்ணற்ற சடங்குகள் இந்து மதத்தின் பல பிரிவினரால் கடை பிடிக்கப்பட்டாலும் , மிக பெரும்பான்மையான இந்துக்களால் கீழ் காணும் எட்டு வகையான சடங்குகள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.

சீமந்தம்:

கருவுற்ற தாய்க்கு,4 ,6, அல்லது 8 மாதத்தில் கருவும், தாயும் ஆரோக்கியமாக இருக்க செய்யப்படும் சடங்காகும். ஹோமம் வளர்த்து அதற்குரிய மந்திரங்களை சொல்லி , தாயும், சேயும் நலமுற இருக்க செய்யப்படும் சடங்காகும்

நாமகரணம்:

குழந்தை பிறந்து 11 அல்லது 16வது நாளில் பெயர் சூட்டும் சடங்கு நடை பெறுகிறது. தற்கால சூழ் நிலையில் மருத்துவ மனைகளில் அன்றே பெயர் சூட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே அன்றே பெயர் சூட்டிவிட்டு , குறிப்பிட்ட நாட்களில் ஆயுஷ் ஹோமம் போன்ற சடங்குகளை நடத்தி , குழந்தை நலமாக வளர ஆசி வழங்கப்படுகிறது.

முதல் உணவு

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன் முதலாக திட உணவு ஊட்டப்படுவதும் ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.குழந்தையின் வாழ் நாளில் உணவு தட்டுப்பாடின்றி வாழவும், ஆரோக்கியத்திற்க்காகவும் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

முடி இறக்குதல்

குழந்தைக்கு முதன் முதலாக முடி இறக்குவதும் ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது.முதன் முதலில் வளரும் முடியை இறைவனுக்கு அர்ப்பணித்து , குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த சடங்கு நடை பெறுகிறது.

வித்யாரம்பம்

குழந்தைகளை முதன் முதலில் கல்வி கற்க அனுப்பப்படும்போது, ஹோமம் வளர்த்து சரஸ்வதி மந்திரங்களை உச்சரித்து, குழந்தை கல்வியில் சிறந்தவனாக வளர பிரார்த்தனை செய்யப்படுகிறது.

திருமணம்:

திருமண வயதை எட்டியவுடன் திருமணம் நடத்தப்படுகிறது.திருமணத்தின் போது பெற்றோர்க்கு பாத பூஜை செய்தல்,மாலை மாற்றுதல்,கன்னிகாதானம்,ஹோமம், ,மாங்கல்யம் சூட்டுதல், அக்னி வலம் வருதல்,அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல்,மெட்டி அணிவித்தல் போன்று பல சடங்குகள் செய்யப்படுகின்றன.

சிரார்த்தம்

இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படும் சடங்கு சிரார்த்தம் என அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்குப் பிடித்தமானவற்றை படைத்து இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

இதுபோன்று எண்னற்ற சடங்குகள் இந்து மதத்தில் உண்டு. அவற்றில் சில மட்டுமே இங்கு எடுத்துகாட்டப்பட்டுள்ளது . இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இந்து மதம் மனிதனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும், இறைவனுக்கு நன்றி சொல்லும் முகமாகவும், தொடர்ந்து இறையருள் பெற்று வாழவுமே இந்த சடங்குகள் நடத்தப்படுகின்றன.

பண்டிகைகள் மற்றும் சின்னங்கள்

இந்து மதத்தில் ஏராளமான பண்டிகைகள் கொண்டடப்படுகின்றன.இந்தப் பண்டிகைகள் இந்து மக்களை ஒருங்கிணைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன.இந்தப் பண்டிகைகள் ஆன்மீகம், மதம், தத்துவம்,பண்பாடு, கலாசாரம் இவற்றின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகின்றன. வீட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குடும்பத்தை ஒருங்கிணைக்கவும், ஆலயத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் கொண்டாடப்படுகின்றன.

சிவன் வழிபாட்டின் முக்கிய நிகழ்வாக சிவ ராத்திரியும்,வண்ணங்களின் விழாவாக ஹோலிப்பண்டிகையும்,ஸ்ரீராமரின் பிறந்தனாள் ராம நவமியாகவும்,பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகவும், வினாயாகரின் பிறந்த நாள் வினாயக சதுர்த்தியாகவும்,முப்பெரும் தேவியரை வணங்குவதற்கு நவ ராத்திரியும்,தீய சக்திகளின் மீது இறை சக்தியின் வெற்றியினை கொண்டாட தீபாவளியும், அக்னிக்கு செய்யும் பிரார்த்தனையாக கார்த்திகை தீபமும், சூரிய்னை வழிபட மகர சங்க்ராந்தியும் கொண்டாடப்படுகின்றன. இவற்றை தவிர ஒவ்வொரு பிரதேசத்திலும் நிகழ்ந்த சில ஆன்மிக அதிசயங்களின் அடிப்படையிலும் அந்த அந்தப் பிரதேசத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

சின்னங்கள்

ஓம் என்னும் ப்ரணவ மந்திரம்,உருவமும் அருவமும் அற்ற இறைவனை குறிக்கும் சிவ லிங்கம்,வாழ்வு அனித்தியமானது என்பதை எடுத்து காட்டும், விபூதி,திரிபுரம் எரித்த சிவனின் கண்களில் இருந்து தோன்றிய ருத்ராக்ஷம்,விஷ்ணுவின் அடையாளமாக தரிக்கப்படும், நாமங்கள்,புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞை சக்கரத்தை தூண்டும் திலகம், பகவான் கிருஷ்ணரின் கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் ஒலிக்கப்படும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கும் இவையெல்லம் இந்து மதத்தின் சின்னங்களில் முக்கியமானவையாகும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-8

வர்ணாஸ்ரமம்

ந்து மதத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று வர்ணாஸ்ரமமாகும். இந்து மதம் சமூகத்தை தொழில் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து அதனை வர்ணம் எனவும், வாழ்வின் நிலையினை நான்காகப் பிரித்து அதனை ஆஸ்ரமம் எனவும் குறிப்பிடுகிறது. ஆன்மீகத்தில் ஈடுபட்டு,அரசனுக்கும், நாட்டிற்கும், ஆன்மீக வழிகாட்டிகளாக வாழ்பவர்கள் பிராமணர்கள் என அழைக்கப்பட்டார்கள்.நாட்டை ஆளுகின்ற வம்சத்தினர் க்ஷத்திரியர்கள் ஆவார்கள்.பல்வகை வணிகம் செய்து , நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் வைசியர் என அழைக்கப்பட்டர்கள்.அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்ற அனைத்து தொழிலாளர்கள் அனைவரும் சூத்திரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களே நான்கு வருணத்தவர் ஆவார்.நான்கு வகை வருணத்தவர்களும் , அவரவர்க்ளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர செய்து வந்தால் சமூகம் நல்ல முறையில் இயுங்கும் என இந்து மதம் நம்புகிறது.இப்படி சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட வருண முறை, மனித மன வக்கிரங்களால் , வருணங்களிலிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது.

இறைவனின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள் எனவும்,மார்பிலிருந்து தோன்றியவர்கள் க்ஷத்திரியர்கள் எனவும், வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் வைசியர் எனவும், காலில் இருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் எனவும் பேதம் கற்பிக்கப்பட்டது.முதல் இரண்டு பிரிவினரும், மிக உயர்ந்தவர்கள் எனவும், சூத்திரரகள் மிகவும் தாழ்ந்தவர்கள் எனவும் பேதம் கற்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் அடிமைகளாய் நடத்தப்பட்டனர்.ஆனால் இவை எதுவும் இந்து மதத்தால் வலியுறுத்தப்பட்டதல்ல. ஒரு மதத்தவர்ரல் செய்யப்படும் அனைத்தும் மதத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது என்பது தவ்றாகும்.

வருணம் தொடர்பான குறிப்புகள் ரிக் வேதத்தில் புருஷ ஷூக்தாவில், மிக சிறிய அளவிலேயேப் பேசப்படுகிறது. அதில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படவில்லை.பகவத் கீதையிலும், வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் உருவானது என குறிப்பிடப்படவில்லை.மனிதர்களுக்கு இடையே இயற்கையாய் அமைந்திருக்கும் குங்கள் மற்றும் அவர்கள் செய்கின்ற தொழில் இவற்றின் அடிப்படையிலேயே வருணங்கள் அமைவதாக குறிப்பிடப்படுகிறது. வருணம் என்பது குத்தின் அடிப்படையில் அமைவதுதான் என்பதை ஜபலா உப நிஷத்தில் காணப்படும் இந்த உரையாடல் தெளிவாக குறிப்பிடுகிறது.

கௌதம முனியை சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான். 'அய்யா, எனக்கு என் தந்தையைப் பற்றி எதுவும் தெரியாது.என் தந்தை பெயர் என்ன? அவர் எந்த வருணத்தை சார்ந்தவர் என்பதை நீங்கள் தான் அறிந்து சொல்லவேண்டும்" " இதனை நீ உன் தாயாரிடம் சென்று கேள்" அவனும் முனிவர் சொன்னது போல் அவன் தாயாரிடம் சென்று கேட்கிறான். அவன் தாய் சொல்லுகிறாள். "மகனே என்னை மன்னித்துவிடு. நமது குடும்ப சூழ் நிலை காரணமாக நான் விபச்சாரம் செய்துதான் வாழ்ந்து வந்தேன்.அதனால் நீ யாருக்கு பிறந்தாய் என்று எப்படி சொல்லுவேன் " என்று சொல்லி அழுகிறாள். அவன் நடந்ததை அப்படியே சென்று கௌதம முனிவரிடம் சொல்லுகிறான். " உன் தந்தை யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் நீ நிச்சயமாய் பிராமணன்தான். எவன் உண்மையை மறைக்காமல், நேர்மையாய் நடந்து கொள்கிறானோ அவன் நிச்சயமாய் பிராமணன்தான்" என்று சொல்லுகிறார். இதிலிருந்தே குணத்தின் அடிப்படையிலேயே வருணங்கள் தீர்மானிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

இதைப் போலவே மகாபாரதத்தில் அஸ்வத்தமா பிராமணர் குலத்தில் பிறந்திருந்தாலும்,க்ஷத்திரியனாக மாறி கடுமையான போர்கள் புரிந்து பலரைகொன்று குவித்து பல வெறறிகளை பெறுகிறான். ஆனால் இதற்கு நேர் மாறாக க்ஷத்திரியராகப் பிறந்த விஷ்வாமித்திரர் , பிரமணாராக மாறி ப்ரும்ம ரிஷியானார். இப்படி குணா மற்றும் கடமைகளின் அடிப்படையில் இருந்த வருண முறை பிற்காலத்தில் பிறப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டது. ஆனால் இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வருணாஸ்ரம முறைக்கும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஜாதிய முறைக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.வர்ணாஸ்ரம முறை தொழில் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஜாதிய அமைப்போ பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வருணாஸ்ரம முறை சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்காக ஏற்பட்ட ஒரு சேவை முறை. ஆனால் ஜாதிய அமைப்போ சிலர் தங்களை உயர்த்திகொண்டு , மற்றவர்களை, சுரண்டுகின்ற நிலையை ஏற்படுத்துகிறது. வருணாஸ்ரம முறையில் தீண்டாமை கிடையாது. ஜாதிய அமைப்பில் தீண்டாமை மிகப் பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது.

ஆஸ்ரமம்:

மனித வாழ்வின் நான்கு நிலைகளே , ஆஸ்ரமமாய் இந்து மதத்தில் சொல்லப்படுகிறது.

ப்ரம்மசரியம்: மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை ப்ரம்மச்சரியத்தை கடை பிடித்து, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறது.

க்ரஹஸ்தம்: ப்ரம்மச்சரியத்தின் முடிவில், இல்வாழ்க்கையினை ஏற்படுத்திகொண்டு, தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும், தன்னால் இயன்ற பணிகளை ஆற்றி வர வேண்டும்.இந்த நிலையே க்ரஹஸ்தம் ஆகும். குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, அறங்கள் செய்து,சந்ததியினை வளர்ப்பதே க்ரஹஸ்தனின் கடமையாகும்.

வனப்ரஸ்தம்: க்ரஹஸ்தன் இல்லறத்தில் அதன் கடமைகளை நிறைவேற்றிய பின்னர்,சந்ததிகளுக்கு நல்வாழ்வினை அமைத்து கொடுத்த பின்னர், தம்பதியர், தங்களை தங்கள் குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுவித்து கொண்டு,எந்த பந்தங்களின்றி காட்டில் வாழ்வது போல், உலக வாழ்விலிருந்து ஒதுங்கியிருத்தல் வனப்ரஸ்தம் ஆகும்.

சன்னியாசம்: வனப்ரஸ்தத்தில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், உலக வாழ்வினை முற்றிலும் துறந்து முக்தி அடையும் நிலைக்கு பாடுபடுவதே சன்னியாசம் ஆகும்.

ஆஸ்ரமத்தை பற்றி சுருங்க சொல்லின், கல்வி கற்கும் காலத்தில் கல்வி கேள்விகளில் தேர்ந்து, திருமணம் செய்து இல்வாழ்வை மேற்கொண்டு அதற்குரிய கடமைகளை செய்வது,ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் குடும்ப பொறுப்புகளிலிருந்து ஒதுங்கி ஆன்மீக நாட்டமுடையவராகி, இறுதியில் முக்தி அடைவதே ஆகும்

வர்ணாஸ்ரம முறை இந்து மதத்தின் அடிப்படை எனவும், மிக உயர்ந்த தத்துவம் எனவும் மகாத்மா காந்தி, டாக்டர் ராதாக்ருஷ்ணன் போன்றவர்களால் போற்றப்படுகிறது.வர்ணாஸ்ரம முறை சமூகத்தை சீரழிக்கும் ஒன்று என டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களால் சொல்லப்படுகிறது. வர்ணாஸ்ரம முறை , வேதங்களிலோ அல்லது உபநிஷத்துக்களிலோ விரிவாக விவாதிக்கப்படவில்லை எனவும்,இந்து மதம் அதனை வலியுறுத்தவும் இல்லை எனவும், கலிகால தொடக்கத்தில்,இந்து மத நூல்களை எழுதிய ப்ராமணர்கள் தன்களுக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த நிலையை தக்க வைத்து கொள்ளவே இந்த முறை ஏற்படுத்தப்பட்டது என சொல்வோரும் உண்டு.எது எப்படி இருப்பினும், வர்ணாஸ்ரமததை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஜாதிய அமைப்பு, சமூக சீரழ்விற்கே வழி வகுப்பதால் ஒவ்வொரு இந்துவும் அதனை எதிர்க்க வேண்டும்.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-7

மந்த்ரங்கள்

இந்து மத வழிபாட்டில் மந்த்ரங்களுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.மந்த்ரங்கள் என்பது சில விசேஷ சொற்களின் சேர்க்கையால் பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெறுகின்ற முறையாகும்

மந்த்ரங்களை தொடர்ந்து ஜபித்து வரும்போது எண்ணற்ற ஆற்றல்கள் கிடைக்கும் என இந்து மதம் வலியுறுத்தி சொல்கிறது.மந்த்ரங்களை கீழ்காணும் மூன்று வகையாக சொல்லலாம்.

சப்ரி மந்த்ரங்கள்: இந்த வகையான மந்த்ரங்களை தொடர்ந்து ஜபித்து, த்யானம் செய்துவருபவர்கள் அஷ்டமா சித்திகள் என்று சொல்லப்படும் எட்டுவகையான சித்திகளை அடையலாம்.

தந்த்ரா மந்த்ரங்கள்: இந்த வகையான மந்த்ரங்கள் மிகுந்த கவனமுடனும் தவறின்றியும் ஜெபித்து வருவோர்க்கு உயரிய நிலையில் பல சித்திகளை அளிக்கக் கூடிய மந்த்ரங்களாகும்.

வேத மந்த்ரங்கள்: வேதங்களில் சொல்லப்படும் இந்த மந்த்ரங்கள் வெறும் உலக வாழ்க்கைக்கான மந்த்ரங்களாக இல்லாமல் முக்தி அடைவதற்க்கான மந்த்ரங்களாக கருதப்படுகிறது.

குரு மந்த்ரா: எந்த வகையான மந்த்ரங்களாக இருந்தாலும் அவற்றை ஒரு குருவின் மூலம் பெறுவதே சிறந்தது.அவ்வாறு குருவின் கருணையால் சீடர்களுக்கு உபேதேசிக்கப்படும் மந்த்ரங்கள் குரு மந்த்ரங்கள் என்று அழைக்கப்படுகிறது.குருவின் உபதேசத்தின் அடிப்படையில் பெறப்படும் இந்த மந்த்ரங்கள் சாதகர்களுக்கு நிச்சயம் மிகுந்த பலங்களை தரக்கூடியவைஆகும்

பீஜா மந்த்ரங்கள்: பீஜ மந்த்ராவை , குரு மந்த்ராவின் சாரம் என்றே சொல்லலாம். பீஜ் என்றால் சமஸ்கிருதத்தில் விதை என்று பொருள். ஒரு சிறிய விதை எப்படி வளர்ந்து பெரிய மரமாகி அனைவருக்கும், நிழல் தருகிறதோ, அதைப் போலவே, ஓரிரண்டு சொற்களில் அமைந்துள்ள இந்த பீஜா மந்த்ரங்கள் அற்புதமான ஆற்றல் பெற்றவை.க்லீம், ஸ்ரீம், ஐம், கௌம், க்ரிம் போன்ற மந்த்ரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

த்யான மந்த்ரங்கள்: த்யானத்தில் மனதினை ஒரு நிலை படுத்த பயன்படும் மந்த்ரங்கள் பல உள்ளன. இவை த்யான மந்த்ரங்கள் என்று அழைக்கப்படுகிறது.இம்மந்த்ராக்களின் மூலம் ஞானமும், சமாதி நிலையும், சாத்தியமாகிறது.

குணப்படுத்தும் மந்த்ரங்கள்: சில குறிப்பிட்ட காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் மந்த்ரங்கள் இவ்வகையை சார்ந்தவை. உதாரணமாக க்ரஹ ப்ரவேசம், திருமணம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இம்மந்த்ராக்களை கொண்டு உடல் நலம் பெறவும், பல் வகையான தோஷ நிவர்த்திகளையும் பெற முடியும்

ப்ரணவ மந்த்ரம்: ஓம் என்னும் மந்த்ரமே ப்ரணவ மந்த்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஒம் என்னும் மந்த்ரம் இந்து மத்தின் ஆணி வேறாக அமைந்துள்ள மந்த்ரமாகும்.வேத ஸ்லோகங்களின் ஆரம்பத்திலும், முடிவிலும் இதனை அமைத்தே உச்சரிக்கப்படுகிறது.இந்த பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த வெளியில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது ஓம் என்னும் இந்த ஒலி மட்டுமே என்று இந்து மதம் கூறுகிறது.இந்த பிரபஞசம் அழிக்கப்படும் போது ஏற்படும், பிரளயத்திற்கு பிறகு இந்த ஓம் என்னும் ஒலியே எஞ்சி நிற்கும்.

ப்ரணவ மந்த்ரம் அகர, உகர,மகர, பிந்து,மற்றும் நாதம் என்னும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது.வினாயகரின் உருவமே ஓம் வடிவில் அமைந்திருப்பதை காணலாம்.இதன் காரணமாகவே பிள்ளையார் ப்ரணவ சொருபன் என்று அழைக்கப்படுகிறார். முண்டோக உபனிஷத் முழுமையிலும் ஓங்காரத்தின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் , முருகன் தன் தந்தையான சிவனுக்கு ஓங்காரத்தின் பொருள் உரைப்பது குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. ஓங்கார த்யானத்தின் மூலம் இறைவனை அடைவது எளிது என இந்து மதம் கருதுகிறது. இதனை முண்டோக உப நிஷத் " ஓம் என்பது வில்; ஆன்மாவே அன்பு;இறைவனே அதன் குறி" என அழகக விளக்குகிறது.

ராமகிருஷ்ண பரம ஹம்சரும்" அலைகளின் சப்ததை கொண்டு கடல் இருக்கும் இடத்தை அறிய முடிவது போல், ஓங்கார த்யானத்தின் மூலம் இறைவனை காணலாம்" என குறிப்பிடுகிறார்.பகவான் ரமண மகரிஷியும்" ஓங்காரமே அனைத்து மந்த்ரங்களின் சாரமாகும். இதனைத் தொடர்ந்து த்யானிப்பதால்சமாதி நிலையினையும் அதனைத் தொடர்ந்து மோட்ச்சத்தையும் அடையலாம்" என கூறுகிறார். ஓங்காரம் சேர்த்து சொல்லப்படும் மந்த்ரங்கள் அனைத்தும் வலிமையுடையனவாக மாறுகின்றன.

பஞ்சாக்க்ஷர மந்த்ரா: சிவனுக்கான ஓம் நம சிவாய என்னும் பஞ்சாக்க்ஷர மந்த்ரமும் விஷ்ணுவிற்க்கான ஓம் நமோ நாராயணா என்னும் மந்த்ரமும் மிகவும் முக்கியம் வாய்ந்த மந்த்ரங்களாகும்.இந்த மந்த்ர த்யானத்தின் மூலம் ஞானம் பிறக்கும் என நம்பப்படுகிறது

காயத்ரி மந்த்ரம்: விஸ்வாமித்ரரால் வடிவமைக்கப்பட்ட காயத்ரி மந்த்ரம் மிகுந்த சக்தியுடையதாம். காயத்ரி மந்திரம் தொடர்ந்து ஜபிக்கப்படும்போது வாழ்வின் அத்தனை சௌகரியங்களும் கிடைத்து வெற்றி பெறுவார்கள். ஆனால் மந்த்ரத்தை சரியான முறையில் உச்சரிப்பது அவசியமாகும்.

.ம்ருத்யுஞ்ச மந்த்ரம்: மரணத்தை வெல்லக் கூடிய சிவனுக்கான இம்மந்த்ரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் உடல் நலமுரவும், மரணத்தை வெல்லவும் இயலும். இந்து மந்த்ரங்களில் இதுவும் ஒரு முக்கியமான மந்த்ரமாகும்.

Oom Tryambakam Yajamahey ஓம் த்ரையம்பகம் யஜாமஹே

Sugandhim Pushtivardhanam சுகந்திம் புஷ்டிவர்தனம்

Urvaaruka Meeva Bhandanaath உர்வாருக மீவா பண்டனாத்

Mruthyor Mokshayah Mamrutat ம்ருதுயொய் மோக்ஷயா மம்ருடட்

இந்த மந்த்ரம் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவில் இங்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், சமஸ்கிருதம் அறிந்த ஒருவர் மூலம் இதன் சரியான உச்சரிப்பை ஜெபித்து வரும்போது உறுதியான பலன்கள் கிடைக்கும்

அன்றாட வாழ்விற்க்குத் தேவையான சில பீஜ மந்த்ரங்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இவற்றை உரிய முறையில் ஜெபித்து பயன் பெறலாம்

செல்வம்,வாழ்க்கை வளம் இவற்றைப் பெற ஓம் ஸ்ரீம் ஓம்

மற்றவர்களை கவர்ந்து, பிரபலமாகவும்,

தலைவர்கள் ஆகவும் ஓம் க்ரீம் ஓம்

வியாதிகளிடமிருந்து நிவாரணம் பெற ஓம் க்லீம் ஓம்

கல்வி, தேர்வு, பதவி உயர்வு ஓம் ஐம் ஓம்

பயம்போக்கிட ஓம் ஹம் ஓம்

தாம்பத்ய வாழ்வு சிறக்க ஒம் சாம் ஓம்

மரணத்தை வெல்லும் ம்ருத்யுஞ்செய

மந்த்ரத்தின் பீஜா மந்த்ரம் ஓம் ஜும் சஹா

இது போன்று எண்ணற்ற மந்த்ரங்கள் இந்து மதத்தில் உண்டு. இவற்றை ஜெபித்து பயன் பெற்று வருபவர்கள் ஏராளம்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-6

அறுவகை வழிபாடு

எண்ணற்ற தெய்வங்களை அவரவ்ர் மனத்திண்மைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தும் இந்து மதம் , அவற்றில் முக்கியமானவையாக அறுவகை வழிபாடுகளை அறிவுறுத்துகிறது. இந்த அறுவகை வழிபாடே உட்சமயமாக ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது. மற்றவை எல்லாம் புறச் சமயமாக கூறப்படுகிறது.சைவம்,வைணவம்,சாக்தம், காணாபத்யம்,கௌமாரம் மற்றும் சௌரம் ஆகியவையே இந்த அறுவகை வழிபாடாகும்.

சைவம் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் வழிபாட்டு முறையாகும்.மூல ப்ரம்மனை சிவன் என பெயரிட்டு வழங்கும் மார்க்கமே சைவமாகும்.சைவ மார்க்கம் இந்தியா முழுமையிலும் கடைபிடிக்கப் படுகிறது என்றாலும் தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் அதிகமாக கடைபிடிக்கப்படும் மார்க்கமாகும்.

னைத்து படைப்பிற்க்கும் மூல காரணன் விஷ்ணுவே என வழிபடும் மார்க்கம் வைணவம் ஆகும். இவரே அனைத்து உயிர்களையும் பிரபஞ்சத்தையும் மற்ற தேவர்களையும் படைத்ததாகக் கூறப்படுகிறது.விஷ்ணுவே ஒவ்வொரு யுக முடிவிலும் ஏற்படும் பிரளயத்திற்குப் பிறகு, புதிய உலகை படைக்கிறார் எனவும் நம்பப்படுகிறது.சைவத்தைப் போலவே வைணவமும்,இந்தியா முழுமையிலும் வழக்கில் உள்ள வழிபாடு முறை என்றாலும்,வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் மிகவும் பின்பற்றப்படுகின்ற மார்க்கமாகும்.

தேவி அல்லது சக்தியே அனைத்து படைப்புகளுக்கும் காரணமெனவும்,சிவன்,ப்ரம்மா,விஷ்ணு ஆகியோரையும் அவர்களுக்கு கீழ் மற்ற தெய்வங்களையும் படைத்தவள் என அறிவிக்கும் மார்க்கமாகும்.இவள் ஆதி பராசக்தி எனவும் அழைக்கப்படுகிறாள்.இந்தியாவின் முழுமைக்கும் சக்தி வழிபாடு உண்டென்றாலும், மேற்கு வங்கததில் சாக்தம் மார்க்கம் ஒரு சிறப்பான இடத்தைபிடித்துள்ளது. தெய்வத்தைப் பெண்ணாகவும் பெண்ணை த் தெய்வமாகவும் கொள்வது இந்துமதத்தின் தனி சிறப்பாகும்.

வினாயகர், பிள்ளையார்,கணேஷ் என பல பெயர்களால் அழைக்கப்படும் விக்னேஷ்வரரை முழுமுதற் கடவுளாக கொள்பவர்களின் மார்க்கமே காணாபத்யம் ஆகும். எல்லவற்றிற்கும் மூல காரணம் வினாயகர் என்பதே இம் மார்க்கத்தின் கொள்கையாகும். வினாயகர் வழிபாடு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வட இந்தியாவிலும்,மஹாராஷ்டிரத்தில் மட்டுமே மிகவும் பிரபலமாயிருந்தது.அந்த வழிபாட்டு முறை மெல்ல மெல்ல பரவி இன்று இந்தியா முழுமைக்கும் மிக சிறப்பான வழிபாடாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

கந்தன்,முருகன்,குமரன் என்று எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படும் சுப்ரமணியனை முழு முதற் கடவுளாக கொண்டு வழி பாடு செய்யும் மார்க்கமே கௌமாரம் ஆகும்.முருகனே படைப்பின் மூல காரணன் , அவனே ஆதி கடவுள் என வழிபடுவது இம்மார்க்கத்தின் தன்மையாகும். கௌமார வழிபாடு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான மார்க்கமாகும்.

சூரியன் அல்லது ஜோதியை முழுமுதற் கடவுளாக கொள்ளும் மார்க்கமே சௌரம் ஆகும். இந்து மதத் தோற்றத்தின் போது சூரிய வழிபாடு,மிகவும் முக்கியமாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட பல ஞானத் தேடல்களின் காரணமாக பல் வேறு வழிபாட்டு முறைகள் வந்தன. எனவேதான் சூரியன் அல்லது ஜோதி வழிபாட்டு முறை , தனியொரு மார்க்கமாக தற்பொழுது திகழாவிட்டாலும், மற்ற அனைத்து வழிபாட்டு முறைகளிலும் இரண்டற கலந்துள்ளது.ஒரிசாவில் சூரிய வழிபாடு இன்றும் பெருமளவில் கடைபிடிக்கப்படுகிறது.

இந்து மதம் இந்த அறுவகை வழிபாட்டினையும் சமமாக ஏற்று கொண்டாலும், அந்தந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இந்துக்கள் தங்கள் மார்க்கமே உயர்ந்தது என அறியாமையின் காரணமாக நினைக்க ஆரம்பித்தார்கள். சிவனே உயர்ந்தவன் எனவும்,விஷ்ணுவே உயர்ந்தவன் எனவும், சக்தியே உயர்ந்தவள் எனவும் தங்களுக்குள் வேற்றுமை பாராட்ட ஆரம்பித்தார்கள்.இந்த வேற்றுமையின் ஊடே நாடாளும் மன்னர்கள் நுழைந்த்ததால் , இவர்களுக்குள்ளே உண்டான இந்த பூசல் பெரிதாகி, ஒருவரை ஒருவர் எதிர்க்கின்ற அவல நிலைக்கு ஆளாகினர். இதன் காரணமாகவே சைவ, வைணவப் போராட்டம் ஒரு காலத்தில் மிகப் பெரிதாக வெடித்தது. இது இந்து மதத்தின் தத்துவத்தை அறியாதவர்களாலும், அரசியல்வாதிகள் மதத்திற்குள் நுழைந்ததாலும் இது நிகழ்ந்தது.பின்னர் வந்த ஆதி சங்கரர் இந்த வேற்றுமைகளை எல்லாம் களைந்து அத்வைதம் அறிமுகம் செய்தபோது , வேற்றுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி , ஒருங்கிணைந்த இந்து மதம் புத்துணர்வு பெற்றது.

செவ்வாய், 7 ஜூன், 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-5

த்வைதம்,வஷிஷ்டாத்வைதம்,அத்வைதம்

தர்ஷ்னாக்களின் நீட்சியாக, பிரம்மம், ஆன்மா மற்றும் பிரபஞ்சம் இவ்ற்றிற்கு இடையேயான தொடர்புகுறித்து மூன்று முக்கிய தத்துவங்களையும் நாம் அறிந்தாக வேண்டும்.

த்வைதம்:

மத்துவாச்சாரியாரால் அருளப்பட்டதே த்வைத கோட்பாடாகும். இதன்படி இறைவன் மற்றும் ஆன்மா இவை இரண்டுமே உண்மையானவை. இறைவன் என்பவன் படைத்து காத்து, அழிப்பவன்.கடவுள் பரிபூரணமானவன். அப்பழுக்கற்றவன்.ஆன்மா தனது விடாத முயற்ச்சியினால் இறைவனை அடையலாம். ஆன்மா ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையை அடுத்து வரும் பிறவிகளில் அனுபவித்து, தன்னை மறைத்திருக்கும் குற்றங்கலிலிருந்து முற்றிலுமாய் நீங்கி இறைவனை அடைகிறது என்பதே த்வைத கோட்பாட்டின் சுருக்கமாகும்.

வஷிஷ்டாத்வைதம்,

ராமானுஜரால் அருளப்பட்டது வஷிஷ்டாத்வைதம். இது மேம்படுத்தப்பட்ட அத்வைத கோட்பாடு என்று கூட அழைக்கப்படுகிறது. த்வைதத்தை மறுக்கும் இக்கோட்பாடு, நாம் எதை காண்கிறோமோ, கவனிக்கிறோமோ அவை யாவுமே இறைவன்தான் என கூறுகிறது.கடவுளே அனைத்து படைப்பிற்கும் காரணம்.ஒவ்வொரு உயிரினமும் ஒரு உடலையும், ஒரு ஆன்மாவையும் கொண்டுள்ளன. அது போலவே பிரபஞ்சமே உடலாகவும், அனைத்து ஆன்மாகளின் ஆன்மாவாக இறைவனும் திகழ்கிறார் என்பதே இதன் முக்கிய கோட்பாடாகும். இதன் மூலம் பிரபஞ்சம், இறைவன் என இரண்டு மூல கூறுகள் உண்டாயினும், ஆன்மாவும் இறைவனும் வேறில்லை என எடுத்து காட்டுகிறது. இறைவன் என்னும் ஆரம்பமும் முடிவுமற்ற ஆன்மாவின் அங்கங்களே மற்ற ஆன்மாக்கள் என்பது வஷிஷ்டாத்வைதத்தின் மைய கருத்தாகும்.

அத்வைதம்

வேதாந்தத் தத்துவங்களின் நீட்சியே ஆதிசங்கரரால் வடிவமைக்கப்பட்ட அத்வைத கோட்பாடாகும்.உபநிஷத்துகளின் பல்வேறு கோணங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதே அத்வைதமாகும்.

உபநிஷத்களில் மகா வாக்கியம் என்றழைக்கப்படும் சண்டொக்யா உபநிஷத்தில் காணப்படும் தத்துவமசி (நீயே அதுவாகிறாய்), ப்ரிஹடர்ண்யகா உபநிஷத்தில் காணப்படும் அஹம் ப்ரம்மாஸ்மி(நானே கடவுள்)போன்ற வாக்கியங்களின் தத்துவ விளக்கமே அத்வைதமாகும்.

மற்ற தத்துவங்கள் போல் இல்லாமல் , ப்ரம்மம் என்று சொல்லப்படும் முழுமுதற் பொருள் ஒன்றே உண்மையானது மற்றவை யாவும் மாயை என்கிறது அத்வைதம். இது ஞான யோக கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அத்வைதம் ஏகத்வம் எனவும், மாயா வாதம் எனவும், சங்கரா தத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது.

அத்வைதத்தின் முக்கிய அம்சங்கள்

அத்வைத தத்துவத்தின்படி நம்முள் இருக்கும் ஆன்மா ஒன்றே உணரவும், அறியவும்,பார்க்கவும் சக்தியுடையதாய் இருக்கிறது. ப்ரம்மமும் ஆன்மாவும் இரண்டல்ல ஒன்றேதான். ப்ரம்மம் ஒன்றுதான் அதுவே நம் அனைவரிடமும் பிரிக்கப்பட்டுள்ளது. ப்ரம்மம் மட்டுமே உண்மையானது. ப்ரம்மம் ஒன்றுதான். . ஆனால் மாயை காரணமாக நமக்கு பலவாக தோற்றமளிக்கிறது. நாம் என்று நாம் எதை நினைத்து கொண்டிருக்கிறோமோ அது நாமல்ல. நம்முள் இருக்கும் ப்ரம்மமே நாம். பிரபஞ்சத்தை முழுமையாக ஆக்ரமித்திருக்கும் ப்ரம்மத்தின் ஒரு பகுதியே நாம்.

சற்குண மற்றும் நிர்குண ப்ரம்மம்

உப நிஷத்துக்கள் ப்ரம்மத்தை இயல்பற்றது என குறிக்கின்றன. இதுவே நிர்குண ப்ரம்மம் என்றழைக்கப்படுகிறது. ப்ரம்மத்தின் இயல்புகளை வார்த்தைகளால் வருணிக்க இயலாது. ஆனால் மனிதன் தனது அறியாமையின் காரணமாக ப்ரம்மத்திற்கு பலவகையான இயல்புகளையும் , குணங்களையும் கற்ப்பிக்கிறான். இதன் காரணமாகவே ப்ரம்மம் சற்குண ப்ரம்மம் என்றும் அழைக்கப்படுகிறது. சற்குண ப்ரம்மமே ஈஸ்வரனாக நம்மால் அறியப்படுகிறது. ப்ரம்மமே படைபுகளுக்கு காரணமாயினும் , அது எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. இதனால் அது மட்டுமே உண்மையானது, அழிவற்றது என்பது புலனாகும்.

அத்வைதம் நம்மை நாம் அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. இது ஒரு ஞான யோகப்பயிற்சியாகும். நாம் த்யானிக்கும் போது, பயம், துக்கம், இன்பம், துன்பம், மற்றும் நம்மைப் பற்றி ஒரு பொதுவான உணர்வு ஏற்படும். இந்த உணர்வுதான் நம்முடைய ஆன்மாவா என்றால் நிச்சயமாக இல்லை. நம்மால் கவனிக்கப்படும் எதுவும் ஆன்மாவல்ல. எது கவனிக்கிறதோ அதுவே ஆன்மா என்கிறது அத்வைதம். உயிர்கள் அனைத்தும் ப்ரம்மத்தின் அம்ஸம் என்பதால் அவற்றுள் எவ்வித வேறுபாடும் கிடையாது என்பதே அத்வைதம் நமக்கு தரும் உன்னத உபதேசமாகும்.