வியாழன், 23 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 4


மண வாழ்வு காக்கும் மந்திரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது  திருமருகல் என்னும் தலம். இத்தலத்தில் தான் திருமணம் செய்ய நினைத்திருந்த வாலிபனை பாம்பு தீண்ட செய்வதறியாது அழுது கொண்டிருந்த நங்கையை கண்ட திருஞானசம்பந்தர் , அவளது நிலை கண்டு இரங்கி இப்பதிகத்தைப் பாடி அவனை உயிர்ப்பித்தார். பின்பு இருவருக்கும் திருமணம் செய்து வாழ்த்தியருளினார்.இறையருளினால் விடந்தீர்த்தம் இப்பதிகம் ஒரு ஆன்மீக அற்புதம் அன்றோ? விடந்தீர்ப்பது மட்டுமன்றி மங்கையரின் மண வாழ்வில் ஏற்படும் இன்னல்களை இப்பதிகம் தீர்ப்பதுடன் மணமாகாதப் பெண்களுக்கு இப்பதிகப் பாராயணம் மிகப் பெரிய நன்மையை அளிக்கிறது என்பது அனுபவ உண்மையாகும்,

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
  கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே

பலரும் பரவப் படுவாய் சடைமேல்
  மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.

எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.



செவ்வாய், 21 ஏப்ரல், 2015

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3

எதிரிகளிடமிருந்து காக்கும் இறைப்பதிகம்

திருஞானசம்பந்தர் தனது திருத்தல யாத்திரயின் பொருட்டு மதுரை நகருக்கு சென்று ஒரு மடத்தில்  தங்கியிருந்தார்.மதுரை மன்னன் கூன் பாண்டியன் சமண சமயத்தை தழுவியதோடு சமணர்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்து வந்தான்.இதனை பயன்படுத்தி சமணர்கள் சைவ சமயத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருந்தனர். நாடெங்கிலும் சைவ சமயத்தை திரும்ப தழைத்தோங்க செய்து கொண்டிருக்கும் திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கிறார் என தெரிய வந்ததும் அவரை எப்படியேனும் அழித்துவிட என்ணிய சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்கு இரவு நேரத்தில் தீ வைத்துவிட்டனர். இதனால் அச்சமுற்ற சம்பந்தரோடு தங்கியிருந்த சைவர்கள் அவரிடம் முறையிட்டனர். இது சமணர்களால்தான் நிகழ்த்தப்பட்டது என இறையருளால் தெரிந்து கொண்ட சம்பந்தர், சமணர்களைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு புரிய வைக்க வேண்டி இந்தத் தீ மெதுவாக சென்று பாண்டிய மன்னனை பற்றட்டும் என இறைவனை வேண்டி இப்பதிகத்தை அருளினார்.அருளினால் விளைந்தப் பதிகம் அல்லவா?  அந்தத் தீயும் பாண்டிய மன்னன் உடலுக்குள் சென்று வெப்பு நோயை கொடுத்தது. அதன் பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிகத்தில் பார்க்கலாம்.எதிரிகள் தரும் இன்னல்கள் நம்மை தீண்டாதிருக்க இப்பதிகத்தை தொடர்ந்து படித்து வந்தால் எதிரிகள் கொடுத்து கொண்டிருக்கும் தொல்லைகளில் இருந்து நிச்சயமாக விடுபடலாம்.

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
     பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!      

சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே

தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!

தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!  

செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!  


தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! 

தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே

எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே. 

     
       




அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 3


கடல் கடந்தோரின் துயர் நீக்கும் பதிகம்

ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது)ஒவ்வொரு பதிகத்தின் மூன்றாம் வரியில் செல்ல உந்துக சிந்தையார் தொழ என்ற வரிகள் ஓடத்தை செலுத்தும் துடுப்பின் அசைவாய் அமைந்திருப்பது அற்புதம்.. கடல் கடந்து வாழும் பக்தர்கள் இப்பதிகத்தை தினந்தோறும் உள்ளம் உருக  ஓதும்போது அங்கு ஏற்படும் பிரச்சனைகள் அகல்வதாய் பெரிதும் நம்பப்படுகிறது

கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


நீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.


கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.

வியாழன், 16 ஏப்ரல், 2015

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2

கொ.வை.அரங்கநாதனின் ஆன்மிகச் சாலை: அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2: யாழ் முறிப் பண் திருஞானசம்பந்தர் திருத்தல யாத்திரை மேற்கொண்டு பதிகங்கள் பாடி வந்த போது, எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்தசி...

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2


யாழ் முறிப் பண்

திருஞானசம்பந்தர் திருத்தல யாத்திரை மேற்கொண்டு பதிகங்கள் பாடி வந்த போது, எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்தசிவ பக்தரான நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்   திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்து அவரும்   அவரது மனைவி மதங்கசூளாமணியும் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் (ஒரு வகையான இசைக்கருவிஇசைக்கும் திறமை பெற்றிருந்தார்.


அவர்கள் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என்ற தளத்திற்கு வந்தபோது, அங்கிருந்த பக்தர்கள் நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின்  அற்புத வாசிப்பினால்தான் சம்பந்தரின் பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன எனப் பேசிக் கொண்டனர் இதை செவியுற்ற நாயனார் பதைபதைத்துப் போனார். மக்களுக்கு சம்பந்தரின் மேன்மையை விளக்க எண்ணி யாழினில் வாசிக்க இயலாத ஒருப் பதிகத்தை தாங்கள் பாடியருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சம்பந்தரும் இறைவனை நினைத்து தருமபுரப் பதியில் இப்பதிகத்தைப் பாடியருளினார்.. யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது அவரை தடுத்த திருஞானசம்பந்தர் தொடர்ந்து தனது பதிகங்களுக்கு இசை வாசிக்குமாறு பணித்தருளிணார். பக்தர்களும் உண்மையை உணர்ந்து இருவரையும் வணங்கி மகிழ்ந்தனர். தருமபுரம் சிவனின் அருளால் இப்பதிகம் பாடப் பெற்றதால் அவர் யாழ்முறி நாதர் எனப்போற்றப் பட்டார். எப்பண் வகையிலும் அமையாத இப்பண் யாழ் முறி பண் என்றே அழைக்கப் படுகிறது. இறைவனரூளால் பாடப் பெற்ற அற்புதப் பதிகம் அல்லவா? இப்பதிகத்தின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இங்கு தந்திருக்கிறேன்.படித்துப் பாருங்கள். படிக்கும் போதே தெரியும் இது அருளால் விளைந்தப் பதிகமென்று!.
.
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி 
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ 
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும் 
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. 


செவ்வாய், 3 மார்ச், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் -1


"விகட கவி' சிறு வயதில் அநேகமாக நாம் அனைவருமே இந்த சொல்லை கடந்து வந்திருப்போம். இடமிருந்து படித்தாலும் வலமிருந்து படித்தாலும் ஒரே பொருள் தருகின்ற ஒரு சொல்.  இது போல் இன்னொரு சொல்லை உருவாக்க முயன்று நம்மில் பலர் தோல்வியும் அடைந்திருக்கலாம். ஆனால் இருபத்திரண்டு வரிகளுடன் கூடிய ஒரு பதிகத்தை ஒவ்வொரு இரண்டு வரிகளும் இடமிருந்து படித்தாலும் வலமிருந்து படித்தாலும் ஒரே பொருள் தருவதோடு அதனையும் ஒரு ராகத்தின் கீழ் அமைப்பது என்பது எளிதான காரியமா?தனது மூன்றாவது வயதில் உமை அம்மையினால் ஞானப்பால் அருளப் பெற்று திருக் கடைகாப்பு என்னும் அற்புதப் பதிகங்களை அள்ளி வழங்கிய ஆளுடை பிள்ளையாம் திரு ஞானசம்பந்தர் தான் அந்த அற்புதப் பதிகத்தை அருளியுள்ளார். அவருடைய மற்றப் பதிகங்களைப் போலவே இதிலும் எட்டாவது பதிகத்தில் இராவணன் கைலாயத்தை தூக்க முயன்று இறைவனால் தண்டிக்கப்பட்ட வரலாற்றையும், ஒன்பதாவது பதிகத்தில் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய வரலாற்றையும் பத்தாவது பதிகத்தில் புத்த சமண் மாசு அறுக்கும் வண்ணமுமாகவும் இந்த பதிகம் படைக்கப்பட்டிருப்பது வியற்பிற்குறியதன்றோ?இறையருள் இன்றி இப்படியொரு பதிகம் படைக்க இயலுமா?

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.



குறிப்புரை

யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும். மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - காணுமாறு பூண்ட.  நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை  என்னும் திருவருட்பயனாலறிக. மாயா - வடசொல், உபலட்சணம்

யாகா - யாகசொரூபியே. யாழீ - யாழ்வாசிப்பவனே. காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே. காதா - சங்காரகருத்தாவே. காதுதல் - கொல்லுதல். வடசொல். யார் ஆர் - எவரெவருக்கும். ஆ - (பெற்றவள்) ஆகும். தாய் ஆயாய் - தாயானவனே. (ஆ + தாய் = வினைத்தொகை) ஆயா - ஆராய முடியாத. தார் - மாலை. ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் கொண்டவனே. (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாக ஆயா - காதல் கொண்ட முனிபத்தினிகளாகிய மகளிர்கூட்டத்தை யுடையவனே (தாக ஆயன் குளாம்பல், மராடி என்பது போற்கொள்க) காழீயா ! யா - துன்பங்கள் எவற்றினின்றும் கா - எம்மைக் காப்பாயாக.

தாவா - அழியாத. மூவா - மூப்பில்லாத (என்றும் இளமையாய் உள்ள) தாசா - தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி நீக்குகின்ற, யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே. மா - பெருமை வாய்ந்தவனே! (பண்பாகு பெயர்) மா - ஐராவணமாகிய யானையின்மேல், யா நீ - ஏறி வருபவனே! தானாழி - (தான + ஆழி) = கொடையில் கடல் போன்றவனே. சா - சாவதினின்றும். கா - காப்பாற்றுவாயாக. காசா - இரத்தினம் போன்ற ஒளியை உடையனே! தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. வா - என் முன் எழுந்தருள்வாயாக. மூ - எவற்றினும் முன்னே தோன்றிய. வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. தாவா மூவா இத்தொடர்க் கருத்து. \\\\\\"சாவா மூவாச் சிங்கமே\\\\\\" எனச் சிறிது மாறி அப்பர் வாக்கில் வருவது காண்க. தசகாரியமாவது:- தத்துவரூபம்; தத்துவதரிசனம்; தத்துவ நீக்கம்; ஆன்மரூபம்; ஆன்மதரிசனம்; ஆன்மநீக்கம்; சிவரூபம்; சிவதரிசனம்; சிவயோகம்; சிவபோகம் என்பன. (சுத்திக்கு நீக்கம் என்று கொண்டார் இக்குறிப்புரை எழுதினவர்.) யாநம் - வடசொல். மா - இங்கு இரண்டாயிரம் கொம்புகளை உடைய ஐராவணத்தைக் குறித்தது. தான + ஆழி - தீர்க்கசந்தி. கருணைக்கடல் என்றது போல் கொடைக்கடல் என்றார். காசா:- `மழபாடியுள் மாணிக்கமே\\\\\\' என்ற சுந்தரமூர்த்திகள் வாக்கால் அறிக. வாதம் - காற்று. உப இலக்கணத்தால் ஏனைய பூதங்களையும் தழுவிற்று. இலக்கணக்குறிப்பு : மூவாத்தாசா என்று மிக வேண்டியது இயல் பாயிற்று. காரணம் வருமொழித் தகரம் வடமொழியின் மெல்லோசை உடைத்து ஆதலின். தாசன் - தத்திதாந்த பதம்.

நீவா - என்றும் மாறாத. வாயா - உண்மைப் பொருளானவனே. கா - தாங்கிய. யாழீ - வீணையினையுடையவனே. வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, வான் - தேவர்கள். நோவாவா - துன்பமடையாவாறு. மேரா - மேரு மலையை ஏந்தியவனே. காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. காயா - ஆகாய சொரூபியே. வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. வாய் - உண்மை. காயாழி - வினைத்தொகை. வான் நோ நல்ல பாம்பு என்பதைப்போல. வான் - கொடுமையின் மிகுதி என்னும் பொருளில் வந்தது. காயா - முதற்குறை. வாவா - அடுக்கு; விரைவுப் பொருட்டு.

யா - எவையும் வணங்கத்தக்க. யா - எவற்றிற்கும். காலா - கால வடிவமாக உள்ளவனே. மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் எண்ணெய் போல் வியாபித்து இருப்பவனே. மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) மே - தன்னருகில் வந்து விழும்படியாக. யாழீ - வீணைவாசிப்பவனே. யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. ஆகு - ஆவனவற்றிற்கு. ஆயா - ஆயாதவாறு. கா - எம்மைக் காப்பாயாக (இலக்கணக்குறிப்பு) காலதத்துவமாக உள்ளவன் சிவபெருமானே என்பது \\\\\\"காலமே உனை என்று கொல் காண்பதே\\\\\\" (திருவாசகம்) ஆயா - ஈறு கெட்ட எதிர் மறைவினை எச்சம். ஈற்றுத் தொடரில் ஆய்தலாவது. \\\\\\"மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கேபுகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ\\\\\\" என்பது (திருவாசகக்(தி.8) கருத்து) வீதாமேயாழி - யாழிசையிற் பறவைகள் வந்து வீழ்வதைக் காந்தருவதத்தையார் இலம்பகத்தாலும் அறிக. யாழீ - என்பதற்கு \\\\\\"குழலன்கோட்டன்\\\\\\" என்ற திருமுருகாற்றுப் படை(தி.11)க்கு நச்சினார்க்கினியர் உரைத்தது உரைக்க.

மேலேபோகாமே - மார்க்கண்டேயர் மீது எமன் போகாமல். தேழீ - கடுங்குரலால் உரப்பினவனாய். காலாலே - காலினாலே. கால் ஆனாயே - (அவ்வெமனுக்கு) காலன் ஆனவனே. ஏல் - பொருந்திய. நால் - சனகர் முதலிய நால்வருக்கும். ஆகி - குருவாகிய. ஆல் - கல்லால மரத்தில். ஏலா - ஏற்றவனே. காழீதே - சீகாழியிலுள்ள தெய்வமே. மேகா - (திருமால் மேகவடிவங்கொண்டு வாகனமாகி நிற்க) அந்த மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவனே. போலேமே - யாங்கள் உமது பல்கணத்தில் ஒருவராக எண்ணப்படுதற்கு அத்திருமாலை ஒத்திலோமோ?

நீயா - (உம்மை) நீங்குதல் அறியாத மாநீ (மானீ) - உமா தேவியை உடையவனே. ஏயா - ஒப்பற்ற. மாதா - தாயே. ஏழீ - ஏழிசை வடிவாய் உள்ளவனே. காநீதானே - நீயே வலியவந்து என்னைக் காப்பாயாக. நே - அன்பார்ந்த இடத்தை. தாநீ - இடமாக உடையவனே. காழிவேதா - சீகாழியில் எழுந்தருளியுள்ள வேத சொரூபியே. மாய் - எம்மைக்கொல்லும். ஆநீ - துன்பங்களை. நீ மாயாயே - நீ கொல்ல மாட்டாயா? மான் - மானைப்போன்றவர். மாநீ - மானை உடையவன். ஏழீ - ஏழ்தொகைக் குறிப்பாக இசையை உணர்த்தியது. \\\\\\"ஏழிசையாய் இசைப்பயனாய்\\\\\\" சுந்தரமூர்த்திகளின் வாக்கினாலும் அறிக. காநீதானே - `அழையாமே அருள் நல்குமே\\\\\\' என்னும் திருவோத்தூர்த் திருப்பதிகத்தில் நம் அடிகளார் கூறினமை காண்க. தாநீ - தானத்தை (இடத்தை உடையவனே) எங்களைக் கொல்லும் துன்பத்தை நீ கொல்லமாட்டாயா? என்பது ஓர் நயம்.

நேணவராவிழயாசைழியே, நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே. நே அணவர் - (உமது திருவடியில்) நேயம் பொருந்தும் அடியவராம், ஆ - பசுக்கள். விழ - தன் வயமற்றுக் கிடக்க. யா - (யாத்த) கட்டிய, ஆசை - ஆசையாகிய கயிற்றை. இழியே - அவிழ்த்து விடுபவனே. அடியவரைப் பசுவென்று, ஆசையைக் கயிறென்னாமையால் ஏகதேச உருவகம். நேணவர் - நே + அணவர் எனவும், யாசைழியே - யா, அசை, இழியே எனவும் பதம் பிரித்துக் கொள்க. யா + ஆசை = வினைத்தொகை; நேணவர் - யாசைழியே இல்விரு தொடரும் மரூஉ முடிபின. வேகதளேரியளாயுழிகா - வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா. வேகம் - விலங்குகளில் வேகமாய் ஓடவல்ல மானின், அதள் தோலையணிந்த, ஏரி - அழகனே. (ஏர் - அழகு, இகர விகுதி.) அளாய உழி - துன்பங்கள் எம்மைச் சூழ்ந்தவிடத்து. கா - காப்பாற்றுவாயாக. அளாய என்பற்கு வினை முதல் வருவித்து உரைக்கப்பட்டது. காழியு(ள்)ளாய்! அரிளேதகவே. அரு, இளவு, ஏது, அகவே. ஏதம் - குற்றம். அது கடைக் குறைந்து ஏது என நின்றது. இளவு - சிறுமைத் தன்மை. இளப்பம், இளந்தலை, இளக்காரம், எனவும் வழங்கும். உகரம் - பண்புப்பெயர் விகுதி. அஃகவே என்பது அகவே என நின்றது. அருஏதம் - மன்னித்தற்கரிய குற்றங்கள். இளவு - (எமது) சிறுமைத் தன்மையால் செய்தனவாதலின், அஃகவே - அவை மன்னிக்கத்தக்கன ஆகுக. (அஃகுதல் - சுருங்குதல் இங்குக் குறைந்து மன்னிக்கற்பாலது என்னும் பொருளில் வந்தது). ஏழிசை இராவணனே - ஏழிசை பாடிய இராவணனுமல்லவா பெரும் பிழையும் மன்னிக்கப் பெற்றுத் திருவருளுக்குப் பாத்திரமாயினான். யா - முன்னிலையசை. செருக்கினால் செய்த பெரும் பிழையை மன்னித்த கருணை, சிறுமையாற் செய்த பிழைகளை மன்னிக்கவும் தகும் என மன்றாடியவாறு.

காலே - காற்றாகி யெங்கும் கலந்தவனே. மாலே - எவற்றிற்கும் மாயம் செய்பவனே. மால் - மயக்கம். மாயம் - மாயனென்னும் திருமாலுக்கும் மாயம்செய்பவனாகையினால் சிவ பெருமானுக்கு மாயனென்றொருபெயர் \\\\\\"மறவனை யன்று பன்றிப் பின்சென்ற மாயனை\\\\\\' என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் திரு நள்ளாற்றுப் பதிகத்தாலும் \\\\\\"மாயனே மறிகடல் விடமுண்ட வானவா\\\\\\" என்னும் திருவாசகம் செத்திலாப் பத்தானும் அறிக. மே - சிறந்த. பூ - மலர்ந்த. பூ மேல் ஏ(ய்) - பிரமனும். மாலே - மாலும். காலே - திருவடியையும். மேலே - திருமுடியையும். காண் - காணலை. நீ - ஒழித்த. காழீ - வைரத்தன்மையனே. காழீ! காண் - கடைக்கணி. கால் ஈ - திருவடியைத் தருக. கா:-

வேரி - மணம். ஏண் - பெருமை. நவம் - புதுமை. காழியாயே:- ஏனை - துன்பத்தையும். நீள்நேம் - மிக்க அன்பையும். அடு - முறையே ஒழி(த்தலும்) அள் - அள்ளிக்கொள்ளுதலுமாகிய செய்கை. ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே. தேரகளோடு - தேரர்களின் உபதேசங்களோடு. அமணே - அமணர்களின் உபதேசங்களையும். நினை - நினைத்தலையும். ஏய் - அவரோடு பொருந்துதலையும். ஒழி - ஒழிப்பீராக. காவணமே - அந்நெறிகளிற் சேராமற்காக்கும் திறம். உரிவே - உமக்கு உரியவேயாகும். உரிவே - உரியவே என்பதன் மரூஉ.

நேர் - நேர்மையை. அகழ் ஆம் - கல்லியெறிவதாகிய. இதய ஆசு - மனத்துக் கண் எழும் (காம வெகுளி மயக்கம் என்னும்) முக் குற்றங்களையும். அழி - அழிக்கவல்லவனே. அழீ என்பதன் குறுக்கல்விகாரம். தாய் ஏல் நன் நீயே - உலகுக்கெல்லாம் தாயாந் தன்மையை யேற்கத்தக்கவன் நீ ஒருவனே. \\\\\\"மூவேழுலகுக்கும் தாயே\\\\\\" என்ற திருவாசகத்தும் அறிக. (தி.8 புணர்ச்சிப்பத்து) வாழ் + ந் + அன் = வாணன் என்றாகியதுபோல ஏல் + ந + அன் = ஏனன் என்றாகியது. நல் - நன்மை புரிவதில். நீள் - மிக்கோனே. நீள் முதனிலைத் தொழிற்பெயராய் ஆகுபெயர்ப் பொருளில் நின்று குறுக்கல் விகார முற்ற விளிவேற்றுமை. ஆய் உழிகா - தளர்ந்த இடத்துக் காப்பாயாக. தமிழாகரன் - தமிழே உடம்பாக உடைய திருஞானசம்பந்தனே. காழியுளானின் - சீகாழிப் பதியானைப்பற்றிய. நையே - கேட்டோர் மனம் குழைப்பதாகிய இப்பாடல்களை. நினையே - நினைத்துப் பாடவே. தாழ்(வு). குறைவும் - இசையா - உண்டாகா.


கௌசிகப் பண்ணில் அமைந்த இம்மாலை மாற்றுப்பதிகம் போல் இயற்ற வேறு சில புலவர்கள் முயன்றிருந்தாலும் அருளினால் விளந்த இப்பதிகத்தின் தனிச் சிறப்பை அவர்களால் எட்ட முடியவில்லை என்பதே உண்மை!