வியாழன், 16 ஏப்ரல், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 2


யாழ் முறிப் பண்

திருஞானசம்பந்தர் திருத்தல யாத்திரை மேற்கொண்டு பதிகங்கள் பாடி வந்த போது, எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்தசிவ பக்தரான நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்   திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்து அவரும்   அவரது மனைவி மதங்கசூளாமணியும் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் (ஒரு வகையான இசைக்கருவிஇசைக்கும் திறமை பெற்றிருந்தார்.


அவர்கள் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என்ற தளத்திற்கு வந்தபோது, அங்கிருந்த பக்தர்கள் நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின்  அற்புத வாசிப்பினால்தான் சம்பந்தரின் பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன எனப் பேசிக் கொண்டனர் இதை செவியுற்ற நாயனார் பதைபதைத்துப் போனார். மக்களுக்கு சம்பந்தரின் மேன்மையை விளக்க எண்ணி யாழினில் வாசிக்க இயலாத ஒருப் பதிகத்தை தாங்கள் பாடியருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சம்பந்தரும் இறைவனை நினைத்து தருமபுரப் பதியில் இப்பதிகத்தைப் பாடியருளினார்.. யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது அவரை தடுத்த திருஞானசம்பந்தர் தொடர்ந்து தனது பதிகங்களுக்கு இசை வாசிக்குமாறு பணித்தருளிணார். பக்தர்களும் உண்மையை உணர்ந்து இருவரையும் வணங்கி மகிழ்ந்தனர். தருமபுரம் சிவனின் அருளால் இப்பதிகம் பாடப் பெற்றதால் அவர் யாழ்முறி நாதர் எனப்போற்றப் பட்டார். எப்பண் வகையிலும் அமையாத இப்பண் யாழ் முறி பண் என்றே அழைக்கப் படுகிறது. இறைவனரூளால் பாடப் பெற்ற அற்புதப் பதிகம் அல்லவா? இப்பதிகத்தின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இங்கு தந்திருக்கிறேன்.படித்துப் பாருங்கள். படிக்கும் போதே தெரியும் இது அருளால் விளைந்தப் பதிகமென்று!.
.
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி 
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ 
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும் 
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக