புதன், 25 மே, 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-4

சாத் தர்ஷனாஸ் - ஆறு தத்துவங்கள்

மதங்கள் உண்மையைத் தேடுவதற்கும் அதனை த்யானித்து அதன் மூலம் பிறவி சுழற்ச்சியிலிருந்து விடுபடுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன என இந்து மதம் நம்புகிறது. அறிவை கூர்மையாக்கி ஆன்மாவின் உண்மையான இயல்பு ,கடவுள், பிரபஞ்சத் தோற்றம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக சிந்தித்து உண்மையான ஞானத்தை எடுத்து சொல்லும் வகையில் இந்து மத ஞானிகள் அருமையான, அற்புதமான பல தத்துவங்களை நமக்கு அளித்து விட்டு போயிருக்கிறார்கள்.அவற்றுள் சிறப்பானதாக கருதப்படும் ஆறு தத்துவங்கள் சாத் தர்ஷனாஸ் என்று அழைக்கப்படுகின்றன. வைஷேஷிகா,ந்யாயா, சாங்கியா, யோகா, மீமாம்ஸா மற்றும் வேதாந்தா என்பவையே இந்த தத்துவங்கள் ஆகும். வைஷேஷிக்கா தத்துவம் கனடா முனிவராலும், ந்யாயா தத்துவம் கௌதம முனிவராலும், சாங்கியா தத்துவம் கபில முனிவராலும், யோக தத்துவம் பதஞ்சலி முனிவராலும் மீமாம்ஸ தத்துவம் ஜைமினி முனிவராலும் வேதாந்தம் வியாச முனிவராலும் தொகுத்து அருளப்பட்டது. வேதங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த ஆறு வகை தத்துவங்களும் அவற்றிற்கு இடையே காணப்படும் சில ஒற்றுமைகளின் காரணமாக மூன்று பிரிவுகளாய் அறிஞர்களால் பிரிக்கப்பட்டுள்ளது.வைஷேஷிகா மற்றும் ந்யாயா இரண்டும் ஒரு வகையாகவும், சங்கியா மற்றும் யோகா ஒரு வகையாகவும் மீமாம்ஸா மற்றும் வேதாந்தா மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தத்துவங்களின் காலம் சரியாக கணிக்கப்படவில்லை. எழுத்தறிவு தோன்றுவதற்கு முன்னேரே தோன்றிய இந்த தத்துவங்கள் , குரு தன் சீடர்களுக்கு வாய் மொழியாக கற்பித்து வழிவழியாக காப்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. இதன் காரணமாகவே இந்த சூத்திரங்கள் எளிதில் மனனம் செய்யும் வகையில் மிக சிறியதாக அமைக்கப்பட்டுள்ளன.

வைஷேஷிகா

வைஷேஷிகா ந்யாயாவிற்கு முன்னரே அருளப்பட்டதாகும். எனினும் தற்கால நடைமுறைக்கு மாறுபட்டிருப்பதால் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

ந்யாயா

ந்யாயா என்ற சொல்லுக்கு ஒன்றைப் பற்றி அறிதல் என்பது பொருளாகும்.எந்தவொன்றை பற்றியும் உண்மையான ஞானம் பெற தர்க்க ரீதியாக அணுகுவதே ந்யாயா தத்துவத்தின் சிறப்பாகும். இதன் காரணமாகவே இது தர்க்க வித்யா எனவும் வாத வித்யா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு தத்துவங்களுமே காலம், வெளி, பூமி, மனம், ஆனமா மற்றும் பிரபஞ்சம் இவைகளுக்கான காரணம் இவற்றை பற்றி விரிவாக அறிய முற்படுகின்றன. இரண்டு தத்துவங்களுமே ஒரு முழு முதற் கடவுள், எண்ணற்ற ஆன்மாக்கள் , அணுக்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபஞ்சம் இவற்றைதான் வலியுறுத்துகின்றன. கடவுளால்தான் உலகம் படைக்கப்பட்டதாக இந்த தத்துவங்கள் அறிவிக்கின்றன.

ஞானம்:

ப்ரேமயா என்றழைக்கப்படும் கீழ் கண்டவற்றை பற்றி உண்மையான ஞானம் பெறுதல் அவசியம் என ந்யாயா வலியுறுத்துகிறது.

1)ஆன்மா 2) உடல் 3)இந்திரியங்கள்4)அர்த்தா எனப்படும் இந்த்ரிய உணர்வுகள் 5)புத்தி 6)மனம் 7) செயல்பாடு 8) தோஷம் 9) மாற்றம் 10) பலன் 11)துக்கம் 12) முக்தி

இவற்றை பற்றிய உண்மையான ஞானத்தை எவ்வாறு பெறுவது?

இவற்றைப் பற்றி மட்டுமல்லாது எந்தவொன்றைப் பற்றி ஞானம் பெற வேண்டுமானால் கண்ணுக்கு நேரே தெரியும் விஷயங்கள்(ப்ரதக்ஷா), அந்த விஷயங்களைப் பற்றி யூகித்து அறிதல்(அனுமானா) , கிடைத்த விஷயங்களைஒப்பிட்டு அறிதல்(உபமானா) வேறு வகையான வாய் மொழி ஆதாரங்கள்(சப்தா) ஆகியவற்றை ஆய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுதான் இந்து மதத்தின் சிறப்பு என்று கூட சொல்லலாம். எவர் சொல்லுவதையும் அப்படியே ஏற்று கொள்ளாமல் ஒவ்வொருவரும் தங்கள் அறிவு மற்றும் அனுபவ துணை கொண்டு ஞானம் பெற வேண்டும் என்றுதான் இந்து மத தத்துவங்கள் வலியுறுத்துகின்றன.

கடவுள், ஆன்மா மற்றும் பிரப ஞ்சம்

மனிதனுடைய செயல்களே அதற்கேற்ற பலன்களை அவனுக்கு அளிக்கிறது.இதனை அதிர்ஷ்டா என்றழைக்கும் ந்யாயா, இந்த அதிர்ஷ்டா கடவுளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக தெரிவிக்கிறது. மனிதனை தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும் அதிர்ஷ்டா,கடவுளின் கட்டளைபடியே இயங்குகிறது.கடவுள் அதிர்ஷ்டாவின் போக்கை மாற்றுவதில்லை.ஆனால் அவன்தான் அதனை இயக்குகிறான்.கடவுளே மனிதனுடைய செயல்களுக்கான பலன்களை அதிர்ஷ்டா மூலம் அளிக்கிறான். கடவுள் நீக்கமற நிறைந்த, உலகை கட்டுபடுத்தும் ஓர் அற்புத சக்தி என ந்யாயா கருதுகிறது. கடவுள் ஒருவனே, அவனே உலகை படைத்து இயக்குவதாக ந்யாயா நம்புகிறது.

ஆன்மா உண்மையானது, அழிவற்றது. நான் என்று எதை குறிப்பிடுகிறோமோ அதுவே ஆன்மா.ஆன்மா என்று ஒன்றில்லாமல் கண்ணால் பார்க்க முடியாது, காதால் கேட்க முடியாது. ஒரு காட்சியை நாம் பர்த்த பின், இரண்டு கண்களும் குருடானாலும், நான் அதை பார்த்தேன் என்ற ஞானம் நம்மில் தேங்கி நிற்கும். அது தேங்கி நிற்குமிடமே ஆன்மா. மூளை என்பது ஆன்மா அல்ல. அது ஆன்மாவின் ஒரு கருவியே.உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவற்றதாக இருக்கும். கடவுள் ஒன்றுதான் ஆனால் ஆன்மா எண்ணற்றவை ஆகும்

பிரபஞ்சம் என்பது நிலைத்து நிற்கக் கூடிய மாற்றம் செய்ய முடியாத காரணங்களற்ற அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பூமி(ப்ரிதிவி), நீர்(அபாஸ்), நெருப்பு(தேஜஸ்).மற்றும் வாயு ஆகியவற்றின் அணுக்களின் சீரமைப்பே பிரபஞ்சம்(பராமனஸ்)

முக்தி அல்லது விடுதலை

தவறான ஞானமே அனைத்து துன்பங்களுக்கும் காரணம். தவறான புரிதல் காரணமாகவே விருப்பு வெறுப்பு உண்டாகிறது.அதன் காரணமாகவே செயல்கள் ஏற்ப்படுகிறது. அந்த செயல்களுக்கு உரிய பாராட்டு அல்லது தண்டனை பெறவே பிறப்பு இறப்பு மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்த பிறப்பு இறப்பு காரணமாக எல்லை இல்லா துன்பம் ஏற்படுகிறது.தவறான ஞானம் தவிர்த்து உண்மையான ஞானம் அடையும் பொழுது முக்தி என்னும் விடுதலை கிடைக்கிறது.

உண்மையான ஞானத்தை எவ்வாறு பெறுவது

முதலில் ஞானம் பெற வேண்டிய பொருளைப் பற்றிய சந்தேகம் எழ வேண்டும்.பின்னர் அந்தப் பொருளைப் பற்றி என்ன காரணத்திற்காக அறிய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பொருள் குறித்து முன்னர் உள்ள கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். இந்த பொருள் குறித்து அறிந்த அறிஞர்களுடன் விவாதித்து, பொருளின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும் விவாதங்களினால் உண்மையான ஞானம் பிறக்கும்.

அபவர்க்கா என்னும் முக்தி

ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலில் மறு பிறவி எடுப்பதே , தனது செயல்களுக்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கத்தான். இத்தகைய துன்பங்களில் இருந்து விடுபடுவதை அபவர்க்கா என்று அழைக்கிறது ந்யாயா. முக்தி என்பது துன்பங்களிலிருந்து விடுபட்டு இன்பத்தை அனுபவிப்பது அல்ல. பற்றிலிருந்து விடுபடுவதே உண்மையான முக்தியாகும். முக்தி அடையும்போது ஆன்மாவிற்கும் மனதிற்குமான தொடர்பு முற்றிலும் அறுந்து போகும்.ந்யாயா தத்துவவாதிகளுக்கு முக்தி என்பது ஓர் அர்த்தமற்ற சொல்.அது ஒருவலியில்லாத நிலை. உணர்வுகளும் ஆர்வமும் இல்லாத கல்லைப் போன்றதோர் நிலை. இதுவே ந்யாயாவின் மைய கருத்தாகும்.

யோகாவும் சாங்கியாவும்

சாங்கியா என்பது பதஞ்சலி முனிவரின் யோகாவின் தத்துவ விளக்கமாகவே அமைந்துள்ளது. எனவேதான் இந்த இரண்டு தத்துவங்களும் ஒன்றாக வகை படுத்தப்படுகிறது. இலக்கை அடைவதர்கான முறையான பயிற்சியே யோகமாகும். சாங்கியா என்பது உண்மையை பகுத்தறிவுடன் ஆராய்வதாகும். பதஞ்சலி முனிவரின் யோகா இன்று உலகளவில் அனேக நாடுகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. யோகாவை ஒரு தகுதியான குருவின் மூலம் பயின்று, முறையான கடுமையான பயிற்சி மூலம் முக்தி அடையலாம். சாங்கியா என்பது யோகாவின் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளதால் அதனைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்த தத்துவம் நவீன அறிவியலுடன் ஒத்து போவதால் பல மேல் நாட்டுஅறிஞர்களால் பாராட்டப்பெறுகிறது.தன்னைதானே அறியும் ஆன்மா மற்றும் அதனால் அறியப்படும் மற்றவை , இவை மட்டுமே உண்மையானவை. தன்னையறியும் ஆன்மாவை புருஷா எனவும் பிரபஞ்சத்தை தோற்றுவித்த மூலத்தை ப்ரக்ரிதி எனவும் சாங்க்யா குறிப்பிடுகிறது. இவை இரண்டுமே ஆரம்பமும் முடிவும் அற்றவை. இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறியாமையினால்தான் பிறப்பு இறப்பு உண்டாகிறது.இவை இரண்டையும் வேறுபடுத்தி அறியும்போது முக்தி உண்டாகிறது.

கடவுள் மறுப்பு

சாங்கியா, நிர் ஈஸ்வர சாங்கியா (கடவுள் இல்லை) என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் என்னும் ஒரு படைப்பாளி இருக்கவேண்டிய அவசியத்தை, சாங்கியா நிராகரிக்கிறது. பிரபஞ்ச படைப்புகள் அனைத்தும் ப்ரக்ரிதியிலிருந்து உருவாகியதென்றும்,வேறு எந்த சக்தியுடனும் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என சாங்கியா ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகம் இயங்குவதற்கு கடவுள் போன்று ஒரு அறிவு ஜீவி தேவை இல்லை எனவும், கண்காணிப்பாளராகக் கூட யாரும் இல்லை என்றும் சாங்கியா கருதுகிறது. ஆனால் இக்கருத்தை வேதாந்தங்கள் ஏற்பதில்லை.

படைப்பும் அழிப்பும்

ஒன்றுமில்லாததிலிருந்து எதையும் உருவாக்க முடியாது. அது போலவே இல்லாத ஒன்றை ஒரு படைப்பாளியால் வெளி கொணர முடியாது. எண்ணை இல்லாத கடலையை செக்கில் இட்டு ஆட்டுவதால் ஒன்றும் நிகழ்வதில்லை. கடலையில் எண்ணை இருப்பதால்தான் அறைக்கும்பொழுது எண்ணை கிடைக்கிறது. ஆட்டும்பொழுது எண்ணை கிடைப்பதால்தான் எண்ணை இருந்தது நிரூபணமாகிறது. அதைபோலவே எண்ணை அந்த கடலையில் இருந்துதான் கிடைத்தது என்பதும் நிரூபணமாகிறது. ஒரு சிறிய விதையிலிருந்து எப்படி ஆலமரம் உருவாகிறதோ அதைபோலத்தான் முன்பிருந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சாங்கியா வலியுறுத்துகிறது.

ப்ரக்ரிதி என்று அழைக்கப்படும் மூலம்தான் உலகம் தோன்றுவதற்கு முதல் காரணமாய் அமைகிறது. இதுவே அனைத்திற்கும் ஆணிவேர். இதிலிருந்துதான் புத்தி, அகங்காரம் மற்றும் வேறு நுண்ணிய உணர்வுகள் எல்லாம் தோன்றின. இந்த உணர்வுகள் காரணமாக உலகில் மூன்று விதமான துன்பங்கள் ஏற்படுகிறது. அத்யத்மிகா என அழைக்கப்படும் ஜுரம் போன்ற உடல் நோய்கள் காரணமாக ஏற்படும் துன்பங்கள்,அதிதைமிகா என அழைக்கப்படும் இடி,மின்னல், மழை போன்ற இயற்கையினால் வரும் துன்பங்கள், அதிபொடிகா என் அழைக்கப்படும் மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துகளால் ஏற்படும் துன்பங்கள் இவைகள் எல்லாம் யோக சாதனை செய்து முக்தி அடைவதற்கு இடையூறாக உள்ளவை. எனவே இவை எல்லாவற்றையும் கடந்து யோக சாதனை செய்பவர்கள் முக்தி அடையலாம்

ப்ரக்ரிதி

இதுவே பிரபஞ்ச படைப்பிற்கு மூல காரணம். இது அசைவற்றது. காரணமற்றது. எங்கும் நிறைந்தது. சுயேட்சையானது. தன்னுள் அடங்கிய சத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் என்னும் மூன்று குணங்களை மட்டுமேசார்ந்துள்ளது. இந்த மூன்று குணங்கள் ஒவ்வொரு உயிரினிலும் அமையப்பெறுகிறது. சத்வ குணம் ஓங்கி நிற்கும்போது மனிதன் அமைதியானவனாகவும் த்யானிப்பவனாகவும் காணப்படுகிறான். ரஜஸ் ஓங்கியிருக்கும்போது உலகாயா காரியங்களில் தன்னை ஈடுபடுத்திகொள்கிறான். தமஸ் மேலொங்கும்போது சோம்பேறியாகவும் செயலற்றவனாகவும் காணப்படுகிறான். இந்த குணங்களைப் பற்றி பகவத் கீதையும் விரிவாகப் பேசுகிறது. ப்ரக்ரிதியில் மாற்றம் ஏற்படும்பொழுது அதன் சமன் நிலை பாதிக்கப்பட்டு ஒரு இயக்கம் உண்டாகிறது. அந்த இயக்கத்தின் காரணமாகவே உலகம் உண்டானது. இறைவன் என்று சொல்லப்படும் எந்தவொரு அறிவு ஜீவியாலும் உலகம் படைக்கப்படவில்லை.

புருஷா என்னும் ஆன்மா

ஆன்மா என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கையின் தொடர்பு அற்று உள்ளது.ஆன்மாவிற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. அதற்கென்று தனி அடையாளங்கள் எதுவுமில்லை. ஆன்மா காரியம் ஆற்றுவதில்லை. சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மாவிற்கு வண்ம் இல்லை. அது அழிவற்றது. எவ்வளவு பிறவி எடுத்தாலும் ஆன்மா மாற்றம் அடைவதில்லை. இயற்கையின் நிகழ்வுகளை கவனிப்பது மட்டுமே ஆன்மாவின் செயல். அந்த நிகழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாது.

மீமாம்ஸா மற்றும் வேதாந்தா

மீமாம்ஸா என்றால் ஆய்ந்து அறிவது என்று பொருள். மீமாம்ஸா வேதத்தின் கர்ம காண்ட சட்ங்குகளைஆராய்கிறது. வேதாந்தம் வேதங்களின் ததுவார்த்தத்தை அறிய முற்படுகிறது. எனவேதான் இவை இரண்டும் ஒன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளது. வேதத்தின் ஆரம்பக்கால ஆய்வினை பூர்வ மீமாம்ஸா எனவும் பிற்கால ஆய்வினை வேதாந்தம் என்றும் அழைக்கிறார்கள்.

வேதாந்தா

உபனிஷத்துக்கள் எனவும் ப்ரம்ம சூத்ராஸ் எனவும் அழைக்கப்படும் வேதாந்தா சாங்கியா தத்துவத்தின் பல கூறுகளை தன்னிடத்தில் கொண்டாலும் பல வேறுபாடுகளையும் கொண்டிருக்கிறது. ஆன்மா என்பது ஒன்றுதான் அது அவித்தையின் காரணமாக பலவாக தோற்றமளிக்கிறது. கடவுள் எல்லையற்றவர். அவன் ஒவ்வொரு உயிரிடத்திலும் ஆன்மாவக உறைகிறான். ஆன்மாவிற்கு பிறப்பு இறப்பு இல்லை. உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவை பாதிப்பதில்லை. மனித வாழ்க்கையின் குறிக்கோளே நம்முள் இருக்கும் ஆன்மாவை அறிவதே. இது முடிகின்ற காரியம் மட்டும் அல்ல, தவிர்க்கப்படக்கூடாத காரியமும் ஆகும்.

மாயா தத்துவம்

உயிர்களின் உண்மையான குணமே தெய்வீகமானதுதான். நாம் கடவுளாக மாற வேண்டியது இல்லை. நாமே கடவுள்தான்.ஆனால் நம்முள் இருக்கும் தெய்விக சக்தி நமக்கு ஏன் புலப்படுவதில்லை?நம்முடைய அறிவை அறியாமை என்னும் மாயை மறைத்து கொண்டிருப்பதால்தான் நம்மால் நம்மிடம் உள்ள தெய்விக சக்தியை உணர முடிவதில்லை. ஆன்மா ஒன்று மட்டுமே நிரந்தரமானது. அதன் பின்னணியிலேயே நமது செயல்கள் அனைத்தும் நடைபெறுகிறது, நாம் நம்மை உடல், மனம் மற்றும் தன்முனைப்பு ஆகிய உண்மையில்லதவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.நம் ஆன்மாவோடு அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இந்தத் தவறான அடையாளப்படுத்துதல் காரணமாகத்தான் நாம் வியாதி,முதுமை இறப்பு போன்றவற்றை கண்டு அஞ்சுகிறோம். தன்முனைப்போடு நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் போது விருப்பு, வெறுப்பு கோபம் என பல துயர்களுக்கு ஆளாகிறோம். ஆனால் இது எதுவும் நம்முடைய ஆன்மாவை களங்கப் படுத்துவதில்லை. கதிரவனை மறைக்கும் மேகம் போல் நம்முடைய மாயை என்னும் அறியாமை ஆன்மாவை நம்மிடமிருந்து மறைக்கிறது. மேகம் விலகி கதிரவன் பிரகாசிப்பது போல் மாயை நீங்கினால் நமது ஆன்மா சுடர் விட்டு பரிசுத்தமாக ஜொலிக்கிறது. நம்முடைய உண்மையான தன்மையின்மீது த்யானம் செய்தும்,நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வரும்போதும் மாயை நீங்கி நம்முடைய ஆன்மாவை நாம் அறிய முடியும். இவ்வாறு ஆன்ம சுத்தி ஏற்படும் பொழுது மாயை என்னும் மேகங்கள் விலகி ஆன்மா சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதே வேதாந்தாவின் மைய கருத்தாகும்

கர்மாவும் மறு பிறவியும்

ஏன் நல்லவர்கள் துன்புறுகிறார்கள்?ஏன் தீயவை நிகழ இறைவன் அனுமதிக்கிறான்?இவற்றையெல்லாம் கட்டுபடுத்தும் சக்தியற்றவனா இறைவன் போன்ற கேள்விகள் ஒவ்வொரு ஆன்மீக வாதியிடமும் எழக்கூடும்.. மனிதனுடைய நன்மை தீமைகளுக்கு அவனே காரணமாகிறானே தவிர இவற்றிற்கெல்லாம் இறைவன் காரணமில்லை என வேதாந்தா வாதிடுகிறது. நம்முடைய முற்பிறவியின் செயல்களே , நம்முடைய இந்தப் பிறவியின் பலனாக கிடைக்கிறது. இதுவே கர்ம பலன் என்று குறிப்பிடப்படுகிறது. மனிதன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதே தன்னுடைய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கவே என வேதாந்தம் சுட்டிகாட்டுகிறது.

ஒருமைப்பாடு

ஒருமைப்பாடே வேதாந்தத்தின் சிறப்பு மிகு தத்துவமாகும். நாம் எதை காண்கிறோமோ எதை அனுபவிக்கிறோமோ அவை அத்தனையும் இறைவனாலேயே படைக்கப்பட்டது.நம்மிடம் உள்ள அதே ஆன்மாதான் அனைத்து உயிரினங்களிலும் இருக்கிறது.அது இல்லாத இடமே இல்லை. எனவே இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஆண்டான் அடிமை என்று எதுவுமில்லை. இந்த தத்துவம் கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறை படுத்துதல் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. வானம், பூமி, மரம் செடி கொடி இவை அனைத்திலும் நம்மிலும் இருப்பது ஒரே ஆன்மாதான். புழு பூசி போன்று அனைத்து உயிரினங்களில் இருப்பதுவும் அதே ஆன்மாதான். மனிதர்களில் நாம் சிலரை தாழ்த்தியும் சிலரை உயர்த்தியும் பேசுகிறோமே, இவர்கள் அத்தனை பேரிலும் இருப்பதுவும் அதே ஆன்மாதான். இதை நாம் உணர்வோமானால் அத்தனை உயிர்களிடத்தும் அன்பு பிறக்கும். உன்னில் இருப்பதும் என்னில் இருப்பதும் ஒரே ஆன்மா என்ற ஞானம் ஏற்பட்ட பின் அங்கு உயர்வு தாழ்வு எவ்வாறு தோன்றும்?

இதைத்தான் ஈஷா உப நிஷத் " ஆன்மா என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. யார் ஒருவர் அனைத்து உயிரினங்களிலும் தன்னுடைய ஆன்மாவையும்,தன் ஆன்மாவில் அனைத்து உயிரினங்களை காணமுடிகிறதோ அவரால் எப்படி மற்றவர்களை வெறுக்க இயலும்" என வினவுகிறது. நீ வேறு நான் வேறு என்ற நினைவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகிறது. இதைத்தான்" இரண்டாவதிலிருந்து ஏற்படும் அச்சம் "என்று வேதாந்தம் குறிப்பிடுகிறது.நாம் மற்றவர்களை காட்டிலும் சிறிது வேறு பட்டவர்கள் என்ற நினைவே அனைத்து துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. அனைத்து உயிரினங்களிலும் ஒரே ஆன்மாதான் உறைகிறது என்ற ஞானம் எற்பட்டால் , இன்பம் மேலோங்கும்.

தர்ஷனாஸ் என்னும் தத்துவங்கள் மிகவும் அற்புதமானவையாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய இந்து ஞானிகள் எவ்வளவு சிந்தனையாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றை கொண்டே அறியலாம்.மேலும் இந்து மதத்தில் எந்த கருத்தும் எவர் மீதும் திணிக்கப்படுவதில்லை என்பதற்கும் அவரர் சிந்தனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிப்பதற்கு முழு உரிமையும் உண்டு என்பதை இந்த தத்துவங்களின் மூலமே அறியலாம். இங்கு அந்த தத்துவங்களின் மைய கருத்துக்களில் சிலவற்றை மட்டுமே தந்திருக்கிறேன். இந்த தத்துவங்களை முழுமையாக விளக்கினால் ஒவ்வொன்றும் ஒரு பெரிய நூலாக விரியும். இங்கு இந்த தத்துவங்களின் அறிமுகம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த தத்துவங்களை முழுமையாக படித்து பயன் பெறலாம். இந்த தத்துவத்தின் சிறப்பினை உணர்ந்தே ஜெர்மானிய மார்க்க அறிஞர் மேக்ஸ் முல்லர் என்பவர் " இந்து மத தத்துவங்கள் அனைத்தும் மாணிக்க கற்கள்" எனப் பாராட்டியிருக்கிறார். இந்துக்களாக பிறந்த நாம் அனைவரும் இந்த தத்துவங்களை கற்பதோடு , இவை நம்முடைய தத்துவங்கள் என்பதில் நிச்ச்யம் பெருமை கொள்ளலாம்.

ஞாயிறு, 8 மே, 2011

இந்து மதம் ஓர் அறிமுகம்-பகுதி-3


புனித நூல்கள்

இந்து மதம் வேறு சில மதங்களைப் போல ஒரு நூல்,ஒரு தூதர் அடிப்படையில் அமைந்தது அல்ல.இந்து மதத்தின் அடிப்படையே ஒவ்வொரு தனி மனிதனும அவனது ஆற்றல்களுக்கு ஏற்றாற்போல் அல்லது அவனுக்கு விதிக்கப்பட்டதுபோல் இறைவனை அடையக்கூடிய நிலை ஏற்படும் என்பதாகும்.எனவே தனிமனித அனுபவங்களும் சமூகம் சார்ந்த அனுபவங்களும் பலவிதமான புனித நூல்களை இந்து மதத்திற்குத் தந்திருக்கிறது. இந்து மதத்தின் புனித நூல்கள் இரண்டு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஷ்ருதி மற்றொன்று ஸ்மிருதி. ஷ்ருதி வகை நூல்கள் கேட்கப்பட்டவை என்றும் ஸ்ம்ருதி வகை நூல்கள் ஞாபகப்படுத்தப்பட்டவை என்றும் வகைபடுத்தப்படுகிறது. இறைவனால் அருளப்பட்டு மகான்களால் கேட்கப்பட்டவை ஷ்ருதி நூல்கள் என்றும் இறையனுபவங்களின் ஞபாகத்தொகுப்பே ஸ்ம்ருதி நூல்கள் என்றும் கொள்ளலாம். நான்கு வேதங்கள் மற்றும் உப நிஷத் போன்ற நூல்கள் ஷ்ருதி என்று அழைக்கப்படுகிறது.இதிகாசங்கள், பகவத்கீதை, புராணங்கள், தர்ம சாஸ்த்ரா போன்ற நூல்கள் ஸ்ம்ருதி வகை நூலகளாகும் . இவற்றை தவிர உபவேதங்கள்,ஆகமம், தந்த்ரா போன்ற ஏராளமான புனித நூல்கள் இந்து மத்த்தில் உண்டு. இந்தப் புனித நூல்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில்தான் உள்ளது என்றாலும், தமிழ், குஜராத்தி, பெங்காலி போன்ற மொழிகளிலும் எண்ணற்றப் புனித நூல்கள் உண்டு. தமிழில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டப் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவருட்பா போன்ற எண்ணற்ற புனித நூல்கள் வேதங்களுக்கு இணையாகவே மதிக்கப் படுகின்றன. இம்மாதிரியான புனித நூல்கள் இந்துக்களின் வணக்கத்திற்குறியவையாக உள்ளன. இவற்றை மனனம் செய்வது, ஓதுவது ஆகியவற்றால் இறையருள் கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்

வேதங்கள்

உலகின் பழமையான நூல்களாக இந்து மத வேதங்கள் ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதங்கள் அழிவற்றவை என நம்பப்படுகிறது. வேதங்கள் ஒவ்வொரு யுக ஆரம்பத்திலும் இறைவனால் பூமிக்கு கொண்டு வரப்படுகிறது.உலக மர்மங்களை தன்னிடத்தே கொண்டுள்ள இயற்க்கையை வழி நடத்த மட்டுமல்லாதுஆன்ம அனுபவங்களை அறிவிப்பதற்காகவுமே வேதங்கள் பூமிக்கு அளிக்கப்படுகிறது.மேலான பார்வைக்கு இவை சம்பிரதாயப் பாடல்களாக தோன்றினாலும், பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெறும் வகையிலேயே இவை அருளப்பட்டுள்ளது.

வேதங்கள் ரிக்,யஜுர், சாம மற்றும் அதர்வண என நான்காகும்.இவையே சதுர் வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதங்கள் எப்பொழுது படைக்கப் பட்டவை என்பது இன்னும் அறியப்படவில்லை.வேதங்கள் முதன்முதலாக வியாசரால்தான் தொகுக்கப் பட்டன. ஒவ்வொரு வேதத்திலும் நான்கு முக்கியப் பகுதிகள் உண்டு. தேவ மந்திரங்கள் அடங்கியப் பகுதி "சம்ஹிதா" எனவும்,சடங்குகள் பற்றிய விளக்கங்கள் "பிரமணா" பகுதியிலும், த்யானம், யோகம் போன்றவை"ஆரண்யகா"பகுதியிலும், இறைப் பற்றிய தத்துவங்கள்"உப நிஷத்" பகுதியிலும் காணலாம். வேதங்கள் மிகவும் நுண்ணியமாகவும், சூட்ச்சமுமாகப் படைக்கப் பட்டுள்ளதால் ஆழ்ந்த கவனமுடன் படிப்பவர்களே உண்மையானப் பொருளை அறிய முடியும்.

ரிக்வேதம்

ரிக்வேதம் பெரும்பாலும் இறை மந்திரங்கள் அடங்கிய நூலாகும். ரிக் வேத 'சம்ஹிதா" பகுதியில் 1017 அத்தியாயங்கள் உள்ளன. இவை "ஸூக்தா" என்றழைக்கப்படுகிறது. ரிக் வேதத்தில் பல இடங்களில் ஓர் இறை கொள்கை வலியுறுத்தப்பட்டாலும்,உருவ வழிபாட்டினை ஏற்றுகொண்டுள்ளது.

சாம வேதம்.

சாம வேதம் ரிக் வேதத்தின் சுருக்கப்பட்ட வடிவமாகவே படைக்கப்பட்டுள்ளது. சாம வேதம் தனக்கென்று புதிய தத்துவங்களை அறிவிக்காமல் ரிக் வேத தத்துவங்களையே எளிமையாகவும் இசையாகவும் கொடுத்துள்ளது. எனவேதான் வேத நூல் ஆய்வாளர் டேவிட் பார்லே இவ்வாறு கூறுகிறார்.

"ரிக் வேதம் என்பது வார்த்தை என்றால், சாம வேதம் அதன் பாடலாகவும் பொழிப்புரையாகவும் விளங்குகிறது.ரிக் வேதம் ஞானம் என்றால் அதனை எளிமையாக வெளிபடுத்துவது சாம வேதம்"

யஜுர் வேதம்

யஜுர் வேதம் இந்து மத சடங்குகளுக்கான வழிகாட்டி நூல் என்றே சொல்லலாம்.வேத விற்ப்பன்னர்களால் செய்யப்படவேண்டிய வேள்விகள் மற்றும் அதற்கான நடைமுறைகளை இந்த வேதம் விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.

அதர்வண வேதம்:

இந்த வேதம் மற்ற வேதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். மந்திர, தந்திரங்களை பற்றி விரிவாக இதில் விளக்கப்படுகிறது. இந்த வேதத்தில்தான், வேத கால சமூகத்தின் வாழ்க்கை முறை சுட்டிகாட்டப்படுகிறது.

உப நிஷத்துக்கள்:

உப நிஷத் என்பதற்க்கான பொருள்"அருகில் அமர்வது "என்பதாம். குருவின் அருகில் அமர்ந்து சிஷ்யர்களால் கற்கப்பட்டவையே உப நிஷத்துகள் என்று அழைக்கப்படுகிறது. வேதத்தின் இறுதி பகுதியாக இவை அமைந்துள்ளதால் "வேதாந்தம் " என்றும் அழைக்கப்படுகிறது. அந்தம் என்ற சமஸ்கிருத சொல் இறுதி என்பதை குறிக்கும். உப நிஷத்துகள் இந்து மதத்தின் தத்துவ மையங்கள் என்றே கூறலாம். உப நிஷத்துகளில் அடங்கிய தத்துவங்களை மிக சிறந்த தத்துவங்களாக நமது நாட்டு அறிஞர்கள் மட்டும் அல்லாது பல வெளி நாட்டு அறிஞர்களும் ஏற்றுகொண்டுள்ளனர். வேதங்களின் காலத்தைப் போலவே உப நிஷத்துகள் காலமும் சரிவர கவனிக்கப்படவில்லை என்றாலும் கி.மு 800 மற்றும் 400 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலமாக இருக்கலாம் என பல ஆரய்சியாளர்களால் கருதப்படுகிறது. உப நிஷத்துக்கள் 108 க்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதென்றாலும் கீழ்கண்ட உப நிஷத்துக்கள் அவற்றுள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

சந்தோக்க்யா,கேனா,அயித்ரேயா,கதா,முண்டக ,தைத்ரியேக,ப்ரிஹடர்ண்யகா, , ஸ்வேடஸ்வதாரா,ஈஷா,ப்ரசனா,மண்டுக்யா,மைத்ரி போன்றவை சில முக்கியமான உப நிஷத்துக்கள் ஆகும்.

ப்ரிஹடர்ண்யகா உபநிஷத்தில்

"உண்மை அற்றதிலிருந்து என்னை உண்மைக்கு அழைத்து செல்... இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல்... இறப்பிலிருந்து என்னை அழிவற்ற தன்மைக்கு அழைத்து செல் " என்று வேண்டப்படுகிறது. இதனை அடைய வேண்டுமானால் ஆன்மா அழிவற்றது அது அனைத்து உயிர்க்கும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து , உயிர்களிடத்தில் வேறுபாடு இல்லை என்ற ஞானம் வரப்பெறவேண்டும் என்பதைத்தான் உப நிஷத்துக்கள் வலியுறுத்துகின்றன. ஆண்டான், அடிமை, ஏழை, பணக்காரன், மனிதன், மிருகம் இப்படி எவ்வித வேறுபடுமின்றி அனைத்திலும் இருப்பது ஒரே ஆன்மாதான் என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் என்பதே உப நிஷத்துக்கள் காட்டும் வாழ்க்கை நெறியாகும். இத்தகைய ஒருமைப்பாடுதான் இந்து மத தத்துவ சாரம்சமும் கூட. உப நிஷத்துக்கள் காட்டும் தத்துவங்களை விளக்க முற்படின் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும் என்பதால் ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே இங்கு தரப்பட்டது. இந்து மதத்தின் ததுவங்களை விரிவாக அறிய நினைப்பவர்கள் நிச்சயமாக உப நிஷத்துக்களை கற்றாக வேண்டும்.

ஆகமங்கள்

வேதத்திற்கு இணையாக கருதப்படுவை ஆகமங்களாகும்.ஆகமம் என்றால் வரப்பெற்றது என்பது பொருளாகும். இறைவனிடமிருந்து வரப்பெற்றது எனக் கொள்ளலாம். ஆகமம் மற்றும் தந்த்ரா என்பவை அறிவு களஞ்சியங்களாகும்.சைவம்,வைஷ்ணவம் மற்றும் சாக்தம் ஆகிய மூன்று வகை வழிபாடுகளில் ஆகமங்கள் உண்டு.சாக்தம் வழிபாட்டிற்கான ஆகமங்கள் தந்த்ரா என அழைக்கப்படுகிறது. ஆகமங்களில் கீழ்கண்ட பொருள்கள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

1) வழிபடும் முறை 2)யோகா 3)யந்த்ரங்கள் 4) மந்த்ரப் ப்ரயோகம் 5) ஆலயம் மற்றும் நகர் வடிவமைத்தல 6) சமூக பழக்க வழ்க்கங்கள் 7) சமூகம் மற்றும் பொது விழாக்கள் 8) புனித தலங்கள் 9) பிரபஞ்சம், படைப்பு மற்றும் அழிப்பு தொடர்பான உண்மைகள் 10) ஆன்ம தத்துவங்கள் 11) ஆசார அனுஷ்டானங்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான இதர விஷய்ங்கள். ஆகமங்கள் மந்த்ரம், தந்த்ரம் மற்றும் யந்த்ரம் என மூன்று பகுதிகள் அடங்கியது.

மந்த்ரம் என்பது கடவுளின் ஒலி வடிவமாக கூறப்படுகிறது.யந்த்ரா என்பது தேவதைகளாக கருதப்படுகிறது.ஒவ்வொரு தேவதைகளுக்கான யந்த்ரங்கள் தயாரிக்கும் வழிவகைகள் பற்றியும் அவற்றில் மந்த்ர உச்சாடனம் மூலம் உருவேற்றி பலன் பெறும் முறைகள் பற்றி குறிப்பிடுகிறது.

தந்த்ரா என்பது மந்த்ர, யந்த்ரங்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை விளக்குகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மந்த்ர யந்த்ரங்கள் ஆன்மிக சக்தியின் ஒருங்கிணைப்பு மையம். தந்த்ரா என்பது அந்த மையத்திலிருந்து சாதகன் பலன் பெறுவதற்கான வழிகாட்டி என கொள்ளலாம்.

ஆகமங்கள் ஞானப் பாதை ,யோகப் பாதை,க்ரியப் பாதை மற்றும் காரியப் பாதை என நான்கு முக்கிய தத்துவங்களை விளக்குகிறது. ஞானப்பாதையில் பிரப ஞ்சத்தின் அமைப்பு, உலகம் இயங்குவதற்க்கான காரணம் மற்றும் படைப்பு மற்றும் அழிப்பு ஆகியவற்றை விளக்குகிறது.சாதகன் முக்தி அடையும் வழிமுறைகளை விளக்கி சொல்கிறது. யோகப் பாதையில், ஞானப் பாதையில் சொல்லப்படும் ஆன்மிக தத்துவங்களை அனுபவ வாயிலாக அறிவதற்கான வழி முறைகளை சொல்கிறது.யோகம் மனிதனது மனத்தினையும்,சிந்தனை மற்றும் செயல்களை தூய்மை படுத்துவதற்க்கான வழி முறைகளை கற்று தருகிறது.குண்டலினி போன்ற யோக முறைகளும் இதில்தான் விரிவாக விளக்கப்படுகிறது.

க்ரியாப் பாதையில் ஆலயம் கட்டுதல், பூஜை முறைகள், யாத்திரைகள் , ஆன்மிக சட்டத்திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது. காரியப் பாதை ஆசார அனுஷ்டானங்கள் அதற்கான விதி முறைகள் ஆகியவற்றை விளம்புகிறது.

சைவத்தில் காமிகா,வீரா, பரமேஸ்வரா, ஸ்வயம்புவா போன்று 28 ஆகமங்களும் ஏராளமான உப ஆகமங்களும் உள்ளன.சைவ ஆகமங்கள் சிவனை முழு முதல் கடவுளாக கொள்கின்றன.

வைஷ்ணவத்தில் ஈஸ்வர,அஹிர் புத்னியா,நாரதா போன்று ஏராளமான ஆகமங்கள் உண்டு.வைஷ்ணவ ஆகமங்கள் விஷ்ணுவை முழு முதல் கடவுளாக கொள்கின்றன.சாக்தத்தில் குல வர்ஷா,ருத்ர மாலா, பிரபத் மாலா போன்று 64 ஆகமங்கள் உண்டு. இந்த ஆகமங்கள் சிவ சக்தி உரையாடல்களாய் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாக்த ஆகமங்கள் சக்தியை முழு முதல் கடவுளாக கொள்கின்றன..

இதிகாசங்கள்:

இந்து மதத்தின் இரண்டு கண்களாய் விளங்குவது இராமாயணமும், மஹா பாரதமும். ராம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சுவை பட கூறும் இந்த இரண்டு நூல்களைப் பற்றியும் அனைவரும் அறிவிர்கள் என்பதால் இவற்றைப் பற்றி இங்கு விரிவாக விளக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் படிக்க வேண்டியவை இந்த இரண்டு இதிகாசங்களும் என்பதை மட்டும் இங்கு வலியுறுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்

தர்ம சாஸ்த்ரா

ஸ்ம்ருதி வகை நூலகளில் தர்ம சாஸ்த்ரா என்று அழைக்கப்படும் சட்ட நூல்கள் முக்கியமானவையாகும். தனி நபர் மற்றும் சமுக ஒழுக்கங்களை வலியுறுத்துவதுதான் இந்த தர்ம சாஸ்த்ராக்களின் அடிப்படையாகும். ஒவ்வொரு யுகத்திலும், இம்மாதிரியான சட்ட நூல்களை தருவதற்காக சிலர்

பிறப்பிக்கப்படுவதாகவும், அவர்கள் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒழுங்கு படுத்துவதுடன், தேவையற்றவற்றை நீக்கியும், தேவையானவற்றை சேர்த்தும், வேதங்களின் அடிப்படையில் சட்ட நூலகளை உருவாக்குவார்கள் என்று இந்து மதம் நம்புகிறது. அவ்வாறு இயற்றப்பட்ட சட்ட நூல்களில் மனு ஸ்ம்ருதி, யஜ்ன ஸ்ம்ருதி மற்றும் பராசர ஸ்ம்ருதி ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது. மனு ஸ்ம்ருதி சத்ய யுகத்திற்காகவும், யஜ்ன ஸ்ம்ருதி த்ரேதா யுகத்திற்காகவும்,சாங்கா ஸ்ம்ருதி த்வபர யுகத்திற்காகவும், பராசர ஸ்ம்ருதி கலி யுகத்திற்காகவும் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. மனு ஸ்ம்ருதி நூல்தான் இந்து மத நூல்களிலேயே அதிகமான விமர்சன்ங்களுக்கு ஆளாகும் நூல் என்று சொல்லலாம்.மனுஸ்ம்ருதி 12 அத்தியாயங்களையும் 2694 ஸ்லொகங்களையும் கொண்டது. அக்காரா, வ்யவஹாரா, ப்ராயசித்தா, ராஜ தர்மா என்று நான்கு காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பிரம்மாவால், பிருகு முனி உள்ளிட்ட முனிவர்களுக்கு அருளப்பட்டதாக கருதப்படுகிறது. வர்ணாஸ்ரம முறையை தீவீரமாக ஆதரிப்பதால் பலத்த விமர்சன்ங்களுக்கு உட்படுத்தப் படுகிறது.

மனு தர்மத்தின் வழியிலேயே ஆட்சி நடத்தப் படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், பிராமணர்களை தவிர இதர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுப்பபடுகிறது.ஆனால் அந்த அளவிற்கு மனு தர்மம் அதிகாரம் செலுத்தியதா இல்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தெற்கு மற்றும் வட இந்தியாவில் மனு தர்மத்தை முன் நிறுத்தி ஆட்சிகள் நடைப் பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.மதுராவைப் பற்றி எழுதிய மெகஸ்தனிஸோ அல்லது அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியரோ மனு ஸ்ம்ருதி பற்றி தங்கள் நூல்களில் எதுவும் குறிப்படவில்லை என்பது கவனிக்கதக்கது.

18 ஆம் நூற்றாண்டில் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் மனு ஸ்ம்ருதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட பின்புதான், மனு ஸ்ம்ருதி பற்றி பரவலாக அறியபிபட்டது. இது பற்றி அவாரி என்னும் மேல் நாட்டு ஆய்வாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"மனு தர்மம் இந்தியா முழுவது கடை பிடிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு.வில்லியம் ஜோன்ஸ் மனுதர்மத்தை பற்றியும் அதன் ஆளுமையை பற்றியும் மிகை படுத்தி எழுதிவிட்டார்"

இந்தியாவின் தலித் அறிஞர்களும் பெண்ணுரிமையாளர்களும் மனு தர்மத்தை கடுமையாக எதிர்த்த போதும்,சில மேல் நாட்டு அறிஞர்கள் அதனை வெகுவாக புகழ்கின்றனர். ஜெர்மானிய அறிஞர் ப்ரெட்ரிக் நீச்சே என்பவர் " மனு ஸ்ம்ருதி மிக சிறந்த ஆன்மிக மற்றும் சமுக நூல்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் டாக்டர் அம்பெத்கர் அவர்கள் " பௌத்த மதம் இந்தியாவில் வளர அரம்பித்தபின், தங்களை காத்துகொள்ள பிராமணர்களால் வரையப் பட்டதுதான் மனு ஸ்ம்ருதி" என்று குறிப்பிடுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதி,பக்த வேதாந்த சுவாமி, அன்னி பெஸண்ட் அம்மையார், பண்டுரங்க சாஸ்திரி டாக்டர் ராதகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் மனு ஸ்ம்ருதியை வெகுவாக பாராட்டுகிறார்கள்.

மனு ஸ்ம்ருதியை பொருத்தவரை வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்தியே வரைய பட்டுள்ளது. சில ஸ்லோகங்களில் பெண்களை உயர்வாகவும் சில ஸ்லோகங்களில் அவர்களைத் தாழ்வாகவும் சித்தரிக்கிறது.சில ஸ்லோகங்களில் பெண்கள் வேதம் படிக்க கூடாது என்றும் வேறு சில ஸ்லோகங்களில் படிக்கலாம் என்றும் காணப்படுகிறது. இவ்வாறான் முரண்பாடுகளை காணும்போது ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த நூல் பல சிதைவுகளுக்கு ஆளாகி இருப்பதை அறிய முடிகிறது. பல விமர்சனங்கள் எழுப்பப் பட்டாலும் , பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுதிருந்த சூழ் நிலைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட ஒரு நூல் தற்பொழுதைய சூழ் நிலைக்கு அப்படியே பொருந்தி வரவேண்டும் என்பது இயலாத காரியம். எனவே அது எழுதப்பட்ட சூழ் நிலை மற்றும் காலம் இவற்றை கொண்டு பார்க்கும் பொழுது தற்காலத்திற்கும் ஏற்ற வகையில் காணப்படும் பல விஷயங்களும் எழுதபட்டிருக்கும் இந்த நூல் ஒரு அற்புதமான நூல் என்றே கூறலாம்.

புராணங்கள்:

இறைவனது அற்புதங்களைப் பற்றி வழிவழியாக சொல்லப்பட்டு வந்த கதைகளின் தொகுப்பே புராணங்கள் ஆகும்.முதன் முதலில் இப்புராணங்களை வியாச முனிவர்தான் தொகுத்தளித்தார்.புராணங்கள் அனேகம் இருந்தாலும் மகா புராணங்கள் என்று சொல்லப்படுகின்ற் பதினெட்டு புராணங்கள் சிறப்புடையதாக கருதப்படுகிறது.சிவ புராணம், பாகவத புராணம், நாரத புராணம், மார்கண்டேய புராணம்,அக்னி புராணம்,பௌஷ்ய புராணம்,பிரம்ம வைவர்த்த புராணம்,லிங்க புராணம்,வராக புராணம்,ஸ்கந்த புராணம்,வாமண புராணம்,குமார புராணம்,மத்ஸ்ய புராணம்,கருட புராணம் மற்றும் பிரம்மனந்த புராணம் ஆகியவை இந்த பதினெட்டு புராணங்கள் ஆகும். அக்னி புராணத்தில்தான் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.பிரம்மானந்த புராணத்தில்தான், லலிதா சகஸ்ர நாமம் இடம் பெற்றுள்ளது.கருட புராணத்தில் இறப்பிற்கு பின்னான வாழ்வு பற்றி விளக்கப்பட்டுள்ளது.மார்கண்டேய புராணத்தில்தான் தேவி மஹாத்மியம் இடம் பெற்றுள்ளது.இந்த புராணங்களை தவிர உப புராணங்கள், ஸ்தல புராணங்கள், குல புராணங்கள் என்று எண்ணற்ற புராணங்கள் உண்டு.

பகவத் கீதை

பகவத் கீதை மஹா பாரதத்தில் பீஷ்ம பர்வத அத்தியாயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முதன்மையான புனித நூலாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்குமிடையே நடந்த குருஷேத்திர யுத்ததின் போது , பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்டதே பகவத் கீதை ஆகும். எதிரில் நிற்கும் தன் சகோதரர்களை எவ்வாறு எதிர்த்துப் போரிடுவது என அர்ச்சுனன் குழம்பியபோது அவனையும் அவன் வாயிலாக மனித குலத்தையும் தெளிவிக்கவும் ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது பகவத் கீதையாகும். இது 18 அத்தியாயங்களையும் 700 ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது.பகவத் கீதை, வேதங்கள் மற்றும் உபனிஷத்களின் சாராம்சம் என்று கூட சொல்லலாம். கடவுள், ஆன்மா, பிரபஞ்சம், தர்மா, காலம் இவற்றைப் பற்றி பகவத் கீதை விரிவாகப் பேசுகிறது. ஆன்மா அழிவற்றது என்பதைப் பகவத் கீதை எடுத்து இயம்புகிறது. இறப்பு என்பது உடலுக்குதானே தவிர ஆன்மாவிற்க்கு அல்ல. மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுக்கமுடன் ஆற்றவேண்டும். கடமையை கால நேரம் பாராமலும் பலனை எதிர் நோக்காது செய்யவேண்டும்.அவ்வாறான வாழ்க்கை அமையும்போதுதான், வாழ்க்கை நிலையானதாகவும், மகிழ்வானதாகவும் அமையும். இறுதியில் ஞானமும் பிறக்கும் என பகவத் கீதை வலியுறுத்துகிறது.இந்த உலகில் அதர்மம் தலை தூக்கி தர்மம் அழியும் நிலைக்கு ஆளாகும்போதெல்லாம் இறைவன் அவதாரம் நிகழ்ந்து நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் எனவும் பகருகிற்து.மிகப் பெரிய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத் கீதை ஒவ்வொரு இந்துவாலும் கற்கப்படவேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.

இவ்வாறு இந்து மதப் புனித நூல்கள் எண்ணற்றவையாகும். இவை பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மொழிகளிலும் இந்துக்களின் புனித நூல்கள் ஏராள்மாய் உள்ளது.