ஞாயிறு, 5 ஜூலை, 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 29



குழந்தைகள் குறை தீர்க்கும் பாசுரம்

பெரியாழ்வார் காருண்யனாம் கண்ணனுக்கு உள்ளம் உருகப் பாடிய தாலாட்டு. இப் பாசுரத்தினை ஓதுவதன் பயனாய் குழந்தைகள் பிணி நீங்கவும் ஆரோக்கியமாய் வாழ்வதுடன் வையத்துள்  அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது திண்ணம். பெரியாழ்வாரின் இந்த பக்தித் தமிழ் படிக்க படிக்க நெஞ்சை உருகச் செய்து இறைவனது கருணைப் பெற பெரிதும் உதவும்

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே தாலேலோ 
      வையம் அளந்தானே தாலேலோ             

உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும் 
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
      உலகம் அளந்தானே தாலேலோ          
 
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் 
சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு 
இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி 
தந்து உவனாய் நின்றான் தாலேலோ 
      தாமரைக் கண்ணனே தாலேலோ            
 
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ
      தேவகி சிங்கமே தாலேலோ             

 
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று 
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு 
வழு இல் கொடையான் வயிச்சிரவணன் 
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ 
      தூமணி வண்ணனே தாலேலோ             
 
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் 
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் 
மா தக்க என்று வருணன் விடுதந்தான் 
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ 
      சுந்தரத் தோளனே தாலேலோ             
 
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் 
வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் 
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் 
கோனே அழேல் அழேல் தாலேலோ 
      குடந்தைக் கிடந்தானே தாலேலோ             
 
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை 
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ 
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் 
நச்சுமுலை உண்டாய் தாலேலோ 
      நாராயணா அழேல் தாலேலோ            
 
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழேல் அழேல் தாலேலோ 
      அரங்கத்து அணையானே தாலேலோ           
 
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை  இடர்தானே      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக