வியாழன், 1 ஜனவரி, 2015

திருப்பாவை - 18




உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ, கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்:
மத யானையைப் போன்றவனும், புறமுதுகே காட்டாத தோள் வலிமை உடையனுமான நந்தகோபாலனின் மருமகளே, நப்பின்னையே. நறுமணம் வீசும் கூந்தலை உடைய குழலியே தாழ் திறவாய். கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்ன. குயில் இனங்கள் கூவத் தொடங்கி விட்டன. அதை வந்து பார். உனது செந்தாமரைக் கையில் குலுங்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வெளியே வந்து உன் கணவனாகிய கண்ணனின் புகழ் பாட மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து வெளியே வருவாயாக.


திருவெம்பாவை - 18


 

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்ப
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!


பொருள்:
பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது. எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி என மூன்றும் ஆனவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக