ஞாயிறு, 28 டிசம்பர், 2014

திருப்பாவை 14





திருப்பாவை-14
 
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் 
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய் நா வுடையாய்1
 சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்
உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர்  
மலர்கள் எல்லாம் பூத்து விட்டன. ஆம்பல் மலர்களின் இதழ்கள் குவிந்து வாய் மூடி விட்டன. பொழுது விடிந்து விட்டதே. அது உனக்கு இன்னும் புரியவில்லையா? தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர். உங்களுக்கு முன்பு நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று வாய்  பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நீண்ட நாவுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை பாடுவோம், வா!


 திருவெம்பாவை – 14








காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட  வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம் பாடி ஆடேல் ஓர் எம்பாவாய்!




பொருள்:  

பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங் கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்! எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப் பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப் பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும் பாடி, முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்களினும் நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!




. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக