திங்கள், 22 டிசம்பர், 2014

திருப்பாவை 7






கீசு கீசென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
 காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
 ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
    நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
 தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: 

புத்தியில்லாத பெண்ணே, அதிகாலை புலர்ந்து விட்டது. ஆணை சாத்தன் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கி விட்டன. அது உனக்கு கேட்கவில்லையா? நெய் மணம் வீசும் கூந்தலையுடைய ஆயர் குலப் பெண்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத் தாலியும் கலகல என்று ஒலி எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் சல சல என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?





திருவெம்பாவை 7. 

 அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர் 
 உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் 
 சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாயதிறப்பாய் 
 தென்னானென் நம்முன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
 என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்  
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: 
பெண்ணே! நாங்கள் உனக்கு இதுவரை சொன்னது என்ன கொஞ்சமா? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன். விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே சிவ, சிவா என்று வாய் திறப்பாயே. தென்னா என்று அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகிப் போவாயே! அத்தகைய உனக்கு இன்று என்ன நேர்ந்தது? இன்னும் உனக்கு விளையாட்டுதானா? நாங்கள் எல்லோரும் சேர்ந்தும், தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும்   பொழுதும் கொடிய மனமுடையவள் போல பேசாமல் கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக