சனி, 20 டிசம்பர், 2014

திருப்பாவை - 6





 
திருப்பாவை 6 

புள்ளும் சிலம்பினகாண் புள் அரையன் கோயில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு

கன்னச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

 
பொருள்....

பெண்ணே! பறவைகள் விழித்தெழுந்து ஒலி எழுப்புகின்றன. கருடாழ்வாரின் இறைவனாகிய நாராயணனின் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெண்சங்கின் ஒலியை நீ கேட்கவில்லையா? பூதகி என்ற பேய் மகளின் மார்பில் இருந்து கரந்த விஷப் பாலை உண்டவன். அவளது உயிரையும் குடித்து வண்டி சக்கர வடிவில் வந்த சகடாசூரன் என்ற அரக்கனை உதைத்து கொன்றவன் திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில் கொண்டு இருக்கும் திருமால் இத்தகைய சிறப்பு மிக்க இறைவனை முனிவர்களும், யோகியர்களும்
 போற்றி வணங்கும் அரி நமோ நாராயணா என கூறும் வாழ்த்தொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே எழுந்திரு.



 
  




 
  
திருவெம்பாவை 6

 மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
 நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
   தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
    வானவார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
      ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய்
   
பொருள்:

மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! நாளை நானே வந்து உங்களையெல்லாம்  எழுப்புவேன் என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை. உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக