திங்கள், 15 டிசம்பர், 2014

திருப் பாவை

(மாதங்களில் மார்கழியாய் ,மலர்களில் தாமரையாய் காட்சி தரும் எம்பிரானை நோக்கி, பாவை நோன்பிருந்து சூடி கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் அருளியத் திருப்பாவை, தேனினும் இனியதாய் தெவிட்டாத தெள்ளமுதாய் நெஞ்சங்களை நிறைக்கும். சன்மார்க்க நெறி நின்று இறைவனை அடைந்த மாணிக்கவாசகர், ஆண்டாள் ஆகியோர் அருளியப் பாடல்கள் படிக்க படிக்க இன்பம் தருபவை. மார்கழியில் மட்டுமல்ல தினந்தோறும் படித்து இறைவனது அருளைப் பெறச் செய்யும் அற்புதப் பதிகங்கள்)
*******
திருப்பாவை 

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!


சீர்மிகுந்த ஆயர்பாடிச் செல்வச் சிறுமிகளே, மார்கழி மாதத்தில் பூர்ணச் சந்திரனொளியில் நீராடக் காத்திருக்கும் சிறுமிகளே வாருங்கள். பகைவர்க்கு கூர்வேலைக் கொண்டு கொடுந்தொழில்புரியும் நந்த கோபரின் மகனும், அழகிய  மலரரும்பு போன்ற கண்களையுடைய யசோதையின்  இளஞ்சிங்கம் போன்ற புதல்வன் அவன் கருமையான உடலுடையவன். ஆனால் முகமோ ஒளிவீசும் நிலவையொத்தது.  அப்படிப் பட்ட  நாராயணன் நமக்கு வரங்கள்  தருவான். நாம் அவனைத் துதித்து பாரோர் புகழும் வண்ணம்    வணங்குவோம். 



 
திருவெம்பாவை


திருவெம்பாவை ஞானவிளக்கேற்ற வந்த நால்வரில் ஒருவராம் மாணிக்கவாசகரால் அருளப்பட்டது. தேனினும் இனிய திருவாசகத்தின் ஒரு பகுதியாய் அமைந்துள்ளது.. பாவைப் பாடல் வடிவத்தை மாணிக்கவாசகர்,ஆண்டாள் ஆகிய இருவர்மட்டுமே அருளியிருக்கிறார்கள். இருவரும் சன்மார்க்க நெறி நின்று இறைவனை அடைந்தவர்கள். திருவாசகத்தில் அமைந்துள்ள இதரப் பதிகங்களைப் போலவே திருவெம்பாவையும் உள்ளொளிப் பெருக்கி உலப்பிலாஆனந்தம் தருகின்ற அற்புதப் பதிகங்களாய் அமைந்திருக்கின்றன  )




ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாத்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசுஏலோர் எம்பாவாய்

பொருள்......

ஒளி பொருந்திய அகன்ற வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே ஆரம்பமும முடிவும் இல்லாதவன் சிவபெருமான். அருட்பெரும் ஜோதி வடிவானவன். அவன் மகிமையை பாடுகிறோம். அதை கேட்ட பின்னும் நீ தூங்குகிறாயே? உன் காதுகள் கேட்கும் சக்தியற்று போனதா? மகாதேவனின் நெடிய சிலம்பணிந்த திருவடிகளை தெருவில் நின்று நாங்கள் பாடுகிறோம். அதை கேட்டதும் பக்தி நிறைந்த பெண் ஒருத்தி விம்மி விம்மி புரண்டு விழுந்து இந்த நிலத்தில் தன்னை மறந்து கிடந்தாள். இதுவன்றோ பக்தியின் உச்ச நிலை. ஆனால் நீ இன்னும் உறங்கி கொண்டு இருக்கிறாயே? இது என்ன விந்தை? எழுந்து வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக