திங்கள், 8 ஜூன், 2015

அருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 16


கண் நோய் பார்வை குறைபாடு நீக்கும் பதிகம்

வன் தொண்டர் என பக்தர்களால் அழைக்கப்பட்ட சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் திருவொற்றியூர் திருத்தலத்தில் இறையருளால் சங்கிலியாரை மணம் புரிகிறார் .அப்பொழுது இனி உன்னை நான் என்றும் பிரியமாட்டேன் என இறைவன் முன் சபதம் செய்கிறார்.ஆனால் சில நாட்களுக்குப் பிறகு  திருவாரூர் தியாகேசனை தரிசிக்க உணர்வு மேலிட திருவொற்றியூரை நீங்க நினைக்கிறார். சபதத்தை மீறிய அவர் செயலின் காரணமாக இறைவன் திருவிளையாடலின் காரணமாக இரண்டு கண்களையும் இழக்கிறார்.இதனால் துக்கமுறும் ஸ்வாமிகள் இறைவனிடம் தொடர்ந்து வேண்ட அவரது இடது கண் பார்வையை மட்டும் திரும்ப அளிக்கிறார்.திருவாரூர் தியாகேசனை தரிசிக்க தனது வலது கண் பார்வையையும் அளிக்க இப்பதிகத்தின் மூலம் வேண்ட, இறைவனும் திருவருள் கொண்டு பார்வையை அளிக்கிறான். இறைவன் திருவருளினால் பாடப்பெற்ற இப்பதிகப் பாராயணம் கண் தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமை உடையதாம்.

     மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
       பிறரை வேண்டாதே    
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
       முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
       அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
       வாழ்ந்து போதீரே.

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
       விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை
      *கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண்கொண்டீர்
       நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
       வாழ்ந்து போதீரே.

அன்றில் முட்டா தடையுஞ் சோலை
       ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த
      காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார்
      தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால்
       வாழ்ந்து போதீரே.

துருத்தி உறைவீர் பழனம் பதியாச்
       சோற்றுத் துறஆள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர்
      மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள்
      அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால்
       வாழ்ந்து போதீரே.

செந்தண் பவளந் திகழுஞ் சோலை
       இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா(று)
      உமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார்
     தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால்
       வாழ்ந்து போதீரே.

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
       சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல்
       மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து
       தங்கண் காணாது
மனத்தால் வாடிஅடியார் இருந்தால்
       வாழ்ந்து போதீரே.

ஆயம் பேடை அடையுஞ் சோலை
       ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா
      றுமக்காட் பட்டோர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி
      மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால்
       வாழ்ந்து போதீரே.

கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க்
       கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை
            இகழா தேத்துவோம்
பழிதான் ஆவ தறியீர் அடிகேள்
      பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால்
       வாழ்ந்து போதீரே.

பேயோ டேனும் பிரிவொன் றின்னா
       தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதான் அன்றோ
     கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும்
   உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர்
       வாழ்ந்து போதீரே.

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை
       இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே
     இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை
             இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால்
       வாழ்ந்து போதீரே.

காரூர் கண்டத் தெண்டோள் முக்கண்
      கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே
     அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர்
    நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர்
       வாழ்ந்து போதீரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக